விருது மேடையில் ஆனந்தக் கண்ணீர் விட்ட டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்.. நெகிழ்ந்த ரசிகர்கள்
விருது மேடையில் ஆனந்தக் கண்ணீர் விட்ட டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்.. நெகிழ்ந்த ரசிகர்கள்
நியூயார்க்: டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் பெடரர், சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் பேம் விருது வழங்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அமெரிக்காவின் ரோட் தீவில் நடைபெற்ற இந்த விழாவில், பெடரருக்கு இந்த உயரிய கவுரவம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், பெடரரின் மனைவி மிர்கா அவரைப் பற்றி உருக்கமாகப் பேசி அறிமுகப்படுத்தினார். இதன் பின்னர் 30 நிமிடங்கள் உரையாற்றிய ரோஜர் பெடரர், தனது பேச்சின் போது பலமுறை உணர்ச்சிவசப்பட்டு அழுதார். தனது சிறுவயது முன்மாதிரி டென்னிஸ் வீரரான ஸ்டீபன் எட்பெர்க் குறித்து பேசும் போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. இது மகிழ்ச்சியின் கண்ணீர் என்று கூறி அங்கிருந்தவர்களை அவர் சிரிக்க வைத்தார்.
தொடர்ந்து தனது மனைவி மிர்கா மற்றும் உதவியாளர்களுக்கு நன்றி தெரிவித்த போது பெடரரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. "மிர்கா பற்றி பேசும் போது... ஓ கடவுளே, எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. என்னை மறைத்துக் கொள்ள எனக்கு இப்போது டிஷ்யூ பேப்பர்களும், கூலிங் கிளாஸும் தேவை" என்று நகைச்சுவையாகக் கூறினார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 103 ஏடிபி பட்டங்கள் மற்றும் 310 வாரங்கள் உலகின் நம்பர் 1 வீரராக இருந்த சாதனைகளுக்கு மிர்காவின் ஆதரவே முக்கிய காரணம் என்று அவர் நெகிழ்ந்தார்.
மேலும், தனது ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்து மைதானத்தில் பந்தை எடுத்துப் போடும் சிறுவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். "நான் உங்களைப் பார்க்கிறேன். உங்களுக்கும் நன்றி சொல்கிறேன். ஒரு காலத்தில் நானும் உங்களைப் போலத்தான் இருந்தேன்" என்று பெடரர் நெகிழ்ந்தார். 8 விம்பிள்டன் பட்டங்கள் மற்றும் 5 முறை தொடர்ந்து யுஎஸ் ஓபன் பட்டங்களை வென்றுள்ள பெடரர், டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், இந்த விளையாட்டுடனான தனது காதல் எப்போதும் தொடரும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். பெடரரின் இந்த உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.