📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 23, 2026 12:03 PM

யார் இந்த சரண்ஷ் ஜெயின்? 33 வயதில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான சுழற்பந்து வீச்சு ஆல்

யார் இந்த சரண்ஷ் ஜெயின்? 33 வயதில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான சுழற்பந்து வீச்சு ஆல்

யார் இந்த சரண்ஷ் ஜெயின்? 33 வயதில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக 33 வயதான மத்திய பிரதேச ஆல்-ரவுண்டர் சரண்ஷ் ஜெயின் அறிமுக வீரராகக் களம் இறங்கியுள்ளார். இவரது நீண்ட கால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த வாய்ப்பு அமைந்தது.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இப்போட்டிக்கு முன்னதாக, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்து சரண்ஷ் ஜெயின் தனது அறிமுகத் தொப்பியைப் பெற்றுக் கொண்டார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை ஆஃப் ஸ்பின்னரான இவர், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்துள்ளார். காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகியதை அடுத்து இவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

தனது தேர்வு குறித்துப் பேசிய சரண்ஷ் ஜெயின், "ஐபிஎல் போட்டிகள் மட்டுமே இந்திய அணிக்குத் தேர்வாகுவதற்கான அளவுகோல் அல்ல என்பதை எனது தேர்வு நிரூபித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் நான் செய்த கடின உழைப்புக்குக் கிடைத்த பலன் இது" என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்த இவரது ஆட்டம் தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்தது.

கடந்த 2025-26 ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 518 ரன்கள் குவித்ததோடு, 30 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக அசத்தினார். 2014 இல் அறிமுகமான இவர், இதுவரை 54 முதல்தர போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்டுகளையும், 2,223 ரன்களையும் எடுத்துள்ளார்.

மேலும் உள்நாட்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 47 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளையும், 20 டி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் இவர் எடுத்துள்ளார். இவரது தந்தை சுபோத் ஜெயின் 1990 களில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடிய முதல்தர கிரிக்கெட் வீரர் ஆவார். கடந்த 2014 இல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சரண்ஷ் இருந்தபோது, அவரது தந்தை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், அவரது கவனம் சிதறக்கூடாது என்பதற்காகக் குடும்பத்தினர் இதை அவரிடம் மறைத்தனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய பிறகு அவரது தந்தை, "நான் நலமாக உள்ளேன் மகனே, நீ நன்றாக விளையாடினால் நான் இன்னும் வேகமாக குணமடைவேன்" என்று எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கியுள்ளார். பல தடைகளை கடந்து 33 வயதில் இந்திய அணியில் தடம் பதித்துள்ள சரண்ஷ் ஜெயினுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.