15 வயதில் கேப்டனான வைபவ் சூர்யவன்ஷி.. ஷமிக்கு உத்தரவு போடும் நிலை.. துலீப் டிராபியில் சுவாரசியம்
15 வயதில் கேப்டனான வைபவ் சூர்யவன்ஷி.. ஷமிக்கு உத்தரவு போடும் நிலை.. துலீப் டிராபியில் சுவாரசியம்
பெங்களூர்: 2026 துலீப் டிராபி அரையிறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷனுக்கு ஏற்பட்ட திடீர் காயம் காரணமாக, 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் ஒரு மூத்த ஆடவர் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மத்திய மண்டல அணிக்கு எதிரான இந்த அரையிறுதி ஆட்டத்தில், கிழக்கு மண்டல அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான இஷான் கிஷன் காயம் அடைந்தார். 19-வது ஓவரில் பந்தை பிடித்த போது அவரது வலது மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், ஜார்கண்ட் அணியைச் சேர்ந்த குமார் குஷாக்ரா விக்கெட் கீப்பராக பொறுப்பேற்றார். கேப்டன் இஷான் கிஷன் இல்லாததால், அணியின் துணை கேப்டனாக இருந்த வைபவ் சூர்யவன்ஷி தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்தினார்.
பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு இது 2-வது துலீப் டிராபி போட்டியாகும். முன்னதாக, வடகிழக்கு மண்டலத்திற்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஞ்சி கோப்பை தொடரில் அறிமுகமான அவர், இதுவரை 9 முதல்தர போட்டிகளில் விளையாடி 215 ரன்கள் எடுத்துள்ளார். அவரது நீண்ட கால கிரிக்கெட் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே, தேர்வு குழுவினர் இவரை துணை கேப்டனாக நியமித்திருந்தனர். அது சர்ச்சையாகவும் மாறி இருந்தது.
இந்தப் போட்டியில் தற்காலிக கேப்டனான வைபவ் சூர்யவன்ஷி தன்னை விட மூத்த இந்திய வீரர்களான முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோருக்கு உத்தரவு போடும் நிலைக்கு சென்றார். இது குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ரஜத் படிதார் தலைமையிலான மத்திய மண்டல அணி 36 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அபிஜித் சர்க்கார் அபாரமாக பந்துவீசி அமன் மோக்டே (8), குணால் சண்டேலா (6) ஆகியோரை வீழ்த்தினார்.