“உலகக்கோப்பையில் பேட்டிங்கும் பண்ணனும்.. 4 ஓவர் பவுலிங்கும் போடணும்”.. ஆல்
“உலகக்கோப்பையில் பேட்டிங்கும் பண்ணனும்.. 4 ஓவர் பவுலிங்கும் போடணும்”.. ஆல்-ரவுண்டராகும் திலக் வர்மா
மும்பை: இந்திய ஒருநாள் அணியில் திலக் வர்மாவை சேர்க்கவும், அவரை அடுத்த ஆல்-ரவுண்டராக உருவாக்கவும் தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், 2027 உலகக் கோப்பை தொடரில், ஸ்ரேயாஸ் ஐயருக்கான மாற்று வீரராக திலக் வர்மாவை களமிறக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவின் கண்காணிப்பில் திலக் வர்மா இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் டாப்-ஆர்டரில் பந்துவீசக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லாதது நீண்ட காலமாக கவலையை ஏற்படுத்தி வருகிறது. ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி போன்ற ஆல்-ரவுண்டர்கள் அடிக்கடி காயமடைவதால், டாப்-ஆர்டரில் குறைந்தது 4 ஓவர்கள் வீசக்கூடிய ஒரு வீரர் தேவைப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளாக அணிக்கு ஆல் ரவுண்டரை கொண்டு வர வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் படேலை 5 அல்லது 6வது வரிசையில் களமிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காகவே, இடது கை பேட்ஸ்மேன் ஆன திலக் வர்மாவை ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் திலக் வர்மா 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால், லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் அவர் 47.6 சராசரியுடன் சிறப்பாக விளையாடியுள்ளதுடன், 25 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களின் வயது மற்றும் காயம் காரணமாகவும், உலகக் கோப்பையின் போது கே.எல்.ராகுல் 35 வயதைக் கடந்துவிடுவார் என்பதாலும் திலக் வர்மா போன்ற இளம் வீரர்களை உருவாக்க தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 27 அன்று தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரும் நடைபெற உள்ளது. அப்போது திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்பதால் , அக்டோபரில் நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடரில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.