#BREAKING: தூய்மை பணியாளர்களுக்கு ஜாக்பாட்! சம்பள உயர்வு, விடுமுறை
தமிழக சட்டசபை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை மீண்டும் கூடியது. இன்றைய சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. துறை சார்ந்த அமைச்சர்கள் மானியக் கோரிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்தனர்.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்பாக கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைத் திட்டத்தில் 8 முழம் வேட்டிக்கு பதிலாக 4 முழம் வேட்டி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவர் என எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, மகப்பேறு விடுமுறை, சம்பளத்துடன் கூடிய 1 நாள் வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன். அமைச்சரின் தனித் தீர்மானத்திற்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளன.
அமைச்சர் கூறுகையில் “தூய்மை பணியாளர்களுக்கு தற்போது 762 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை 832 ரூபாயாக உயர்த்த முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதோடு தூய்மை பணியாளர்களின் வருகையை டிஜிட்டல் மயத்திலிருந்து மீண்டும் வருகைப் பதிவேடு செய்ய உள்ளோம்.
தூய்மைப் பணியாளர்கள் வாரந்தோறும் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வேண்டி தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது எங்களுடைய கடமை. அதோடு மகப்பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்தும் தமிழக முதல்வர் விஜய் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். வெகு விரைவில் நல்ல முடிவு அறிவிப்பு வெளியாகும்.
இது மட்டுமின்றி தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் இந்த ஆசையும் விரைவில் நிறைவேற்றப்படும்” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சியின் இறுதி ஆண்டில் தான் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் அறிவிப்பு வெளியானது. ஆனால் காலை உணவு தரமாக இல்லை என புகார்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் காலை உணவின் தரத்தை உயர்த்தவும் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், சம்பளத்தை உயர்த்த வேண்டும் எனவும் தூய்மைப் பணியாளர்கள் நீண்ட நாட்கள் போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தற்போது முன்வந்துள்ளது. இதன்படி தனித் தீர்மானத்தை இன்று சட்டசபையில் நிறைவேற்றினார் அமைச்சர் ராஜ்மோகன்.
தற்போது தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், இன்னும் இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகவில்லை. முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இந்த தனித் தீர்மானத்தின் விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் இதுவரைப் போராடியதற்கு இன்று தான் ஆறுதலான தகவலை அளித்துள்ளார் அமைச்சர்.
உலகிலேயே அதிக சமப்ளம் வாங்கத் தகுதியடையவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என பலதரப்பினர் கூறினாலும், அவர்களின் சம்பளம் மிகவும் குறைவு தான். மேலும் இரவு பகல் பாராது தமிழ்நாட்டையே சுத்தப்படுத்தும் அவர்களின் சேவைக்கு தமிழக அரசு இப்போது தான் தகுந்த சலுகைகளை வழங்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.