📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 02, 2026 08:01 PM

லண்டனில் நடிகை த்ரிஷா

லண்டனில் நடிகை த்ரிஷா

லண்டனில் நடிகை த்ரிஷா - மலையாள இயக்குநர் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

’ஏர்லிஃப்ட்’, ’செஃப்’ மற்றும் ’பிப்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன், இந்த படத்தை த்ரில்லர் ஜானரில் உருவாக்குகிறார்.

Published : September 2, 2026 at 7:32 PM IST

சென்னை: நடிகை த்ரிஷா, ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது.

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் திரைப்படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் (Dark psychological) ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, கடைசியாக சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ’விஸ்வம்பரா’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த பிரபல நடிகை ராதிகா சரத்குமார், சூரரை போற்று படம் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா பாலமுரளி ஆகியோருடன் த்ரிஷா இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.‎

’ஏர்லிஃப்ட்’, ’செஃப்’ மற்றும் ’பிப்பா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன். வலுவான மனித உணர்வுகளையும், சுவாரஸ்யமான உலகங்களையும் மையமாகக் கொண்ட கதைகளை தொடர்ந்து கையாண்டு வரும் இவர், தற்போது முதன்முறையாக உளவியல் சார்ந்த கதையை உருவாக்கியுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் பேசுகையில், “ஒருவர் என்னை எந்த ஜானரிலும் சிக்காத கதைகள் இயக்கும் இயக்குநர் என்று மிகவும் பொறுத்தமாக குறிப்பிட்டார். அந்தப் பயணத்தின் மற்றுமொரு புதிய முயற்சிதான் இந்தப் படம். பல வகைகளில் இப்படம் எனக்கு முதல் அனுபவமாக அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம்.

அதோடு த்ரிஷா, ராதிகா, அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்னை மேலும் உற்சாகமாகியுள்ளது” என்றார்.

இப்படத்தின் பெயர் உள்ளிட்டவை குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழு அறிவித்துள்ளது.