நேபாள வெள்ளத்தால் 22,100 குழந்தைகள் உட்பட 65,000 பேர் பாதிப்பு
நேபாள வெள்ளத்தால் 22,100 குழந்தைகள் உட்பட 65,000 பேர் பாதிப்பு – யுனிசெஃப்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
நேபாளத்தின் ரசுவா, நுவாகோட், தாதிங், கோர்கா மற்றும் தனஹுன் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 22,100 குழந்தைகள் உள்பட ஏறத்தாழ 65,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில், ஐந்து வயதிற்குட்பட்ட ஏறத்தாழ 2,600 குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான சிகிச்சை தேவைப்படுகிறது. ஏறத்தாழ 10,500 கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவு தேவைப்படுவதோடு, ஏறத்தாழ 28,317 இளம் பருவத்தினருக்கு இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் தேவைப்படுகின்றன.
இந்த வெள்ளம் அத்தியாவசியக் கட்டமைப்பு வசதிகளையும் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது. இதனால் ஆறு நலவாழ்வு மையங்களும், குறைந்தது 19 பள்ளிகளும் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன; இதனால் குழந்தைகள் நலவாழ்வு, பாதுகாப்பான குடிநீர், கல்வி மற்றும் பாதுகாப்புச் சேவைகளைப் பெறுவது தடைபட்டுள்ளது.
பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன; இவர்களில் பெரும்பாலானோர் தற்காலிகமாக மற்ற குடும்பங்களுடன் தங்கியுள்ளனர், மற்றவர்கள் அரசு நடத்தும் நிவாரண மையங்களுக்குச் சென்றுள்ளனர்.
அத்தியாவசியச் சேவைகளைப் பராமரிக்கவும், மீள்தன்மையை வலுப்படுத்தவும் உள்ளூர் மற்றும் தேசிய அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், யுனிசெஃப் அமைப்பு குடிநீர், நலவாழ்வு மற்றும் தூய்மைப் பணிகள், மருத்துவம், ஊட்டச்சத்து, குழந்தை பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 19,000 மக்களுக்குத் துப்புரவு உபகரணங்கள், சோப்பு, தண்ணீர் கொள்கலன்கள் மற்றும் நீர் சுத்திகரிப்புப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை யுனிசெஃப் ஏற்கனவே வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் யுனிசெஃபிற்கு அவசரமாக 17.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது.