📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 04, 2026 09:03 AM

“வைபவ் சூர்யவன்ஷி விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறோம்.. சச்சின் போல..”.. பிசிசிஐ செயலாளர் பேச்சு

“வைபவ் சூர்யவன்ஷி விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறோம்.. சச்சின் போல..”.. பிசிசிஐ செயலாளர் பேச்சு

“வைபவ் சூர்யவன்ஷி விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறோம்.. சச்சின் போல..”.. பிசிசிஐ செயலாளர் பேச்சு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒரே ஒரு தொடர் மட்டும் சிறப்பாக ஆடும் வீரராக இல்லாமல், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போல பல ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என பிசிசிஐ செயலாளர் கூறி இருக்கிறார். மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று முக்கிய ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில், டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பிசிசிஐ சிறப்பு மைய தலைவர் விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்குப் பின் பேசிய பிசிசிஐ செயலாளர் சைகியா, "15 வயதிலேயே சர்வதேச அரங்கில் முத்திரை பதித்து வரும் இளம் வீரரை வளர்ப்பதில் பிசிசிஐ பெருமை கொள்கிறது. இவர் ஒரே ஒரு தொடரிலோ அல்லது ஒரு ஆண்டிலோ மட்டும் மின்னும் வீரராக மாறிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம். சச்சின் டெண்டுல்கர் போல, மற்ற ஜாம்பவான்கள் போல பல ஆண்டுகள் நிலைத்து நின்று இந்திய அணிக்கு அளப்பரிய சேவையாற்ற வேண்டும். இதற்காக அவரது ஒவ்வொரு அடியையும் அனைத்து கோணங்களிலும் பிசிசிஐ உன்னிப்பாக கண்காணித்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும்" என்றார்.

சமீபத்தில் துலீப் டிராபியில் 15 வயது 157 நாட்களில் அரைசதம் அடித்து இளம் வயது அரைசதம் என்ற 57 ஆண்டுகால சாதனையை வைபவ் தகர்த்தார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி, இந்தியாவின் மிக இளம் சர்வதேச வீரர் என்ற சாதனை படைத்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் 151 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்ற இவர், இந்தியா 3-0 என தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 237.30 ஸ்டிரைக் ரேட்டுடன் 1 சதம், 5 அரைசதம் உட்பட 776 ரன்கள் விளாசினார். அதிக ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதுடன், 72 சிக்சர்களை பறக்கவிட்டு சாதனை படைத்தார். மதிப்புமிக்க வீரர் மற்றும் வளர்ந்து வரும் வீரர் விருதுகளையும் அள்ளினார். மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும் 439 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருது வென்ற வைபவ், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.