சிங்கப்பூரில் 263 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை
சிங்கப்பூரில் 263 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைசிங்கப்பூரின் 61-ஆவது தேசிய தின விழாவை முன்னிட்டு, சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் மஸ்ஜித் சுல்தான் இணைந்து நடத்திய சிறப்பு விழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) மஸ்ஜித் சுல்தான் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய வட்டார மேயரும் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி டென்னிஸ் புவா, மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் 263 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகளை வழங்கிச் சிறப்பித்தார். இது கடந்த ஆண்டை விட 47 மாணவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டில் 300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் முஹம்மது கௌஸ் தெரிவித்தார்.மேலும், சமூகத்திற்குச் சிறந்த சேவையாற்றியதற்காக ரஹ்மத் பதிப்பகம் ஹாஜி எம்.ஏ. முஸ்தபா மற்றும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சிங்கப்பூர்க் கிளையின் தலைவர் முனைவர் எம்.ஏ. காதர் ஆகிய இருவருக்கு 'சிறப்புமிகு குடிமகன் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.முன்னதாக, உம்மு உமராவின் திருக்குர்ஆன் ஓதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. வரவேற்புரை ஆற்றிய கலாச்சாரச் செயலர் ஹாஜா ஜபருல்லாஹ், தேசிய கீதம் மற்றும் குடிமக்கள் உறுதிமொழியை வாசித்து ஜமாஅத்தின் சேவைகளை எடுத்துரைத்தார். ரிபாயி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, இரவு விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.- சிங்கப்பூரில் இருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்