IND vs AFG: இந்திய டெஸ்ட் அணியில் 3வது வீரராக களமிறங்க போவது யார்? கம்பீர் விளக்கம்
IND vs AFG: இந்திய டெஸ்ட் அணியில் 3வது வீரராக களமிறங்க போவது யார்? கம்பீர் விளக்கம்
முல்லாபூரில் சனிக்கிழமை தொடங்கவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் மூன்றாம் நிலை பேட்ஸ்மேனாக சாய் சுதர்சன் களமிறங்குவார் என்று தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதிப்படுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஓராண்டு முடிந்தாலும், இந்த வரிசையில் தனது இடத்தை நிலைநிறுத்த அவர் தொடர்ந்து போராடி வருகிறார்.
இதுவரை பங்கேற்ற 11 இன்னிங்ஸ்களில் 27.45 சராசரியுடன் 302 ரன்களை மட்டுமே சுதர்சன் எடுத்துள்ளார். இதில் அவர் இரண்டு அரை சதங்களை அடித்துள்ளதோடு, அதிகபட்சமாக 87 ரன்களைக் குவித்துள்ளார். இருப்பினும், 2026 ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய அபாரமான பேட்டிங் பார்ம், அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை அவருக்குத் தக்கவைத்துக் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர், "சாய் சுதர்சனுக்கு இன்னும் நியாயமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் பெரும்பாலும் இங்கிலாந்து மண்ணிலேயே விளையாடியுள்ளார். அவருக்குப் போதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஒரு அணியில் 11 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்,
சுதர்சன் மோசமான பார்மில் இல்லை. ஐபிஎல் தொடரில் 700 ரன்களை அவர் எடுத்துள்ளார். 4-5 போட்டிகளை மட்டுமே வைத்து ஒரு வீரரை மதிப்பிட்டால், அணியை சரியாகக் கட்டமைக்க முடியாது," என்று தெரிவித்தார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இடம் பெறாத இந்த ஒருமுறை மட்டும் நடைபெறும் டெஸ்ட் போட்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் மோதலாகும். இதற்கு முன்பு 2018-ல் பெங்களூருவில் இரு அணிகளும் ஒருமுறை நேருக்கு நேர் மோதியிருந்தன.
இலங்கை சுற்றுப்பயணத்திற்காக அணியின் நான்காவது சுழற்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்யும் பணியிலும் இந்திய அணி இந்த போட்டியைப் பயன்படுத்த உள்ளது. மணவ் சுதர் மற்றும் ஹர்ஷ் துபே முதல்முறை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். "மணவ் மற்றும் ஹர்ஷ் இருவரின் பந்துவீச்சு முறைகள் வெவ்வேறு புள்ளிகளைக் கொண்டவை. இலங்கை பயணத்திற்குத் தயாராகும் வகையில், சரியான சுழற்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்ய இது உதவும்," என்றார் கம்பீர்.
"நடப்பாண்டு இறுதியில் நடக்கும் நியூசிலாந்து பயணத்திற்கு நாங்கள் மாறுபட்ட முறையில் தயாராக வேண்டும். எனவே, ஒருநாள் போட்டிகளில் விளையாடும் சில முன்னணி வீரர்களை டெஸ்ட் போட்டிகளுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். டெஸ்ட் போட்டிகளுக்காக நாங்கள் சிறப்பாகத் தயாராக வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம்," என்று அவர் கூட்டத்தின் முடிவில் குறிப்பிட்டார்.