IND vs SL: சோனல் தினுஷாவை இந்தியா அடிக்கவிட்டது ஏன்? காரணத்தை சொன்ன முகமது கையிப்
IND vs SL: சோனல் தினுஷாவை இந்தியா அடிக்கவிட்டது ஏன்? காரணத்தை சொன்ன முகமது கையிப்
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆணை வழங்கியும் வெற்றி பெற முடியாமல் வெறும் டிராவையே சந்தித்தது. இது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணியை சரியாக கணிக்க இந்திய அணி நிர்வாகம் தவறிவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த அணியின் சோனல் தினுஷா இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை தட்டி பறித்தார்.
இது குறித்து பேசிய அவர், "நமது இளம் பந்துவீச்சாளர்களுக்கு இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் குறைவு". இதே விவாதத்தில், இந்தியாவின் இளம் பந்துவீச்சாளர்களுக்கு ஐந்தாம் நாள் ஆடுகளத்தில் பந்துவீசிய அனுபவம் இல்லை என்றும், இந்தத் தொடருக்கு முன்பு அவர்கள் சோனல் தினுஷாவுக்கு எதிராகப் பந்துவீசியதில்லை என்றும் முகமது கைஃப் குறிப்பிட்டார்.
"நமது இளம் பந்துவீச்சாளர்கள் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவது மிகவும் அரிது. அவர்கள் ஐந்தாவது நாளில் விளையாடுவதில்லை. டெஸ்ட் போட்டிகள் அவ்வளவு தூரம் செல்வதும் இல்லை. எனவே, இதை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை."
"மேலும், நாம் இந்த பேட்டரையும் இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஒருவேளை நமக்கு ஜோ ரூட் போன்ற பேட்டர்கள் கிடைத்தால், ரவீந்திர ஜடேஜா போன்றோர் அவர்களுக்கு எதிராகப் பந்துவீசி இருப்பதால் எளிதாகத் திட்டமிட முடிகிறது" என்றார்.
இருப்பினும், இரண்டாவது டெஸ்டில் தினுஷாவை ஒரு புதிர் பேட்டராகவே இந்திய அணி பார்த்திருக்கக் கூடாது என்று கைஃப் சுட்டிக்காட்டினார். "அவர்கள் அவரை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்பதால் முதல் போட்டியில் சற்று வியப்பு இருந்திருக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதே தவறு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நீடித்ததுதான் தவறு. "
"இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரால் அடிக்கப்பட்ட ஒரு கவர் டிரைவ் பவுண்டரியைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. அவர் புல், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்களை விளையாடினாரே தவிர, கவர் டிரைவ் ஆடவில்லை" என்று கைஃப் விளக்கினார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களில் சோனல் தினுஷா 140.00 சராசரியுடன் மொத்தம் 420 ரன்கள் குவித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்ததற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.