“சர்க்கரை விலை உயர்வு: ரூ.36,000 கோடி ஊழல்..” பாஜக அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்!
“சர்க்கரை விலை உயர்வு: ரூ.36,000 கோடி ஊழல்..” பாஜக அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்!
நாடு முழுவதும் சர்க்கரை விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையில், இறக்குமதி வரி நீக்கம், கரும்பு உற்பத்தி குறைவு, பண்டிகைக் காலத் தேவை, ஈ20 பெட்ரோலுக்காக 32% கரும்பு மாற்றம் ஆகியவை காரணமாகக் கூறப்படுகின்றன. இந்த சூழலில், சர்க்கரை விலை ரூ.40 இலிருந்து ரூ.75 ஆக உயர்ந்ததன் மூலம் ரூ.36,000 கோடி ஊழல் நடந்ததாக காங்கிரஸ், மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக குற்றம்சாட்டுகிறது.
நாடு முழுவதும் சர்க்கரையின் விலையானது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. குறைவான கரும்பு உற்பத்தி, பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு போன்றவைகள் காரணங்களாக சொல்லப்படும் நிலையில், இந்தியாவில் சர்க்கரை இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு முற்றிலும் நீக்கியுள்ளது. பற்றாக்குறை காரணமாக கடைகளில் ஏற்கனவே சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் சர்க்கரை பற்றாக்குறைக்கு தொடர்ந்து மத்திய பாஜக அரசை விமர்சித்துவரும் காங்கிரஸ், 36ஆயிரம் கோடி ஊழலுக்கு பாஜக வழிவகை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை கிலோ 40 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக உயர்ந்ததன் மூலம் 36,000 கோடி ரூபாய் ஊழலுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வழிவகுத்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சர்க்கரை தட்டுப்பாடு குறித்துத் தெரிந்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் கருப்புச்சந்தை வியாபாரிகள் பயனடைந்துள்ளதாகக் காங்கிரஸ் பொதுச்செயலர் ரந்தீப் சுர்ஜேவாலா சாடினார்.
மேலும், ஈ20 பெட்ரோலுக்காக 32 சதவீத கரும்பு திசை திருப்பப்பட்டதே தட்டுப்பாட்டிற்குக் காரணம் எனக் குறிப்பிட்டு ரேஷனில் மானிய விலையில் சர்க்கரை வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்கவும் வலியுறுத்தியுள்ளார்.