IND vs SL: இந்த இலங்கை வீரர் சச்சின் மாதிரியே விளையாடுகிறார்.. பிசிசிஐ துணை தலைவர் பாராட்டு
IND vs SL: இந்த இலங்கை வீரர் சச்சின் மாதிரியே விளையாடுகிறார்.. பிசிசிஐ துணை தலைவர் பாராட்டு
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை பேட்ஸ்மேன் சோனல் தினுஷாவின் பேட்டிங் திறமையை பாராட்டி, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொழும்பு SSC மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த தினுஷாவை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இந்த உள்நாட்டுத் தொடரில் களமிறங்கியுள்ள தினுஷா, தனது முதல் நான்கு இன்னிங்ஸிலும் 50 ரன்களுக்கு மேல் குவித்து இலங்கையின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார்.தினuஷாவின் அபாரமான பேட்டிங்கால் ஈர்க்கப்பட்ட ராஜீவ் சுக்லா, அவரது ஆட்டம் தனக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நினைவூட்டுவதாகப் புகழ்ந்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக உருவெடுப்பார் என்றும் சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"இலங்கையின் இந்த சோனல் ஒரு அற்புதமான வீரர். பார்ப்பதற்கு டெண்டுல்கர் போல இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த டெஸ்ட் வீரராக இவரால் வர முடியும்" என்று ராஜீவ் சுக்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், தினுஷா முதல் இன்னிங்ஸில் 100 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 84 ரன்களும் எடுத்தார். இருப்பினும், இலங்கை அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைவதை தடுக்க முடியவில்லை. தற்போது கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்த அவர், மற்றொரு சதம் விளாசினார்.
ஐந்தாம் நாள் ஆட்டத்தின் முதல் சேஷன் நேர முடிவில், இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் 106 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவர் களத்தில் இருந்தார். தினுஷா அடித்த இந்த அரைசதம், அவரை சர்வதேச கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தனது முதல் நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் தலா 50 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்தாவது வீரர் என்ற தனித்துவமான சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான தனது முதல் நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் இங்கிலாந்தின் கென் பாரிங்டன் ஆவார். அவர் 1959-ஆம் ஆண்டில் இந்த மைல்கல்லை எட்டினார். தினுஷா மற்றும் பாரிங்டன் தவிர, இங்கிலாந்தின் டக்ளஸ் ஜார்டின், வெஸ்ட் இண்டீஸின் எவர்டன் வீக்ஸ் மற்றும் க்ளைட் வால்காட் ஆகியோரும் இந்தியாவுக்கு எதிரான தங்கள் முதல் நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் குறைந்தபட்சம் 50 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் ஜார்டின் மற்றும் வீக்ஸ் ஆகிய இருவரும் தங்களது முதல் ஐந்து இன்னிங்ஸ்களிலும் 50 ரன்களைக் கடந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.