“ஜெய்ஸ்வாலை காப்பாற்ற பொய் சொல்றாங்க”.. ஆதாரத்துடன் வெளியான வீடியோ.. பொங்கும் ரசிகர்கள்
“ஜெய்ஸ்வாலை காப்பாற்ற பொய் சொல்றாங்க”.. ஆதாரத்துடன் வெளியான வீடியோ.. பொங்கும் ரசிகர்கள்
கொழும்பு: கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ இடையே மைதானத்தில் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட அறிக்கை தவறானது என்று புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தப் போட்டியின் 17 வது ஓவரில் இரு வீரர்களும் நேருக்கு நேர் முட்டிக்கொண்ட சம்பவத்திற்காக, இருவருக்கும் தலா 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், அசிதா பெர்னாண்டோ தான் முதலில் தனது தலையை ஜெய்ஸ்வாலை நோக்கி நகர்த்தினார் என்றும், அதற்குப் பதிலாக ஜெய்ஸ்வாலும் தலையைச் சாய்த்ததால் இருவரின் தலைகளும் முட்டிக்கொண்டன என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு புதிய வீடியோ கோணம், ஐசிசியின் இந்த விளக்கத்தை முற்றிலும் பொய்யாக்குகிறது. அசிதா பெர்னாண்டோ முதலில் எதுவும் செய்யவில்லை என்றும், ஜெய்ஸ்வால் தான் அவரது எல்லைக்குள் வந்து மோதினார் என்றும் அந்த வீடியோ காட்டுகிறது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் பத்திரிகையாளர் ஆண்ட்ரூ பிடல் பெர்னாண்டோ கடுமையாகச் சாடியுள்ளார்.
அசிதா பெர்னாண்டோ தான் முதலில் தலையை நகர்த்தினார் என்று ஐசிசி கூறியிருப்பது முற்றிலும் தவறு என்றும், கிரிக்கெட்டின் உயரிய அமைப்பான ஐசிசி ரசிகர்களிடம் பகிரங்கமாகப் பொய் கூறியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய ரசிகர்கள் உட்பட பலரும் இவரது கருத்தை ஆதரித்துள்ளனர்.
ஜெய்ஸ்வாலைக் காப்பாற்றவே ஐசிசி இவ்வாறு பொய் சொல்வதாகப் சர்ச்சை எழுந்துள்ளது. ஜெய்ஸ்வாலுக்கு 25 சதவீத அபராதத்தை விடக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதில் இருந்து அவரை காப்பாற்றவே இது போன்ற அறிக்கை வங்கதேசம் வெளியிட்டு உண்மையை மறைத்து இருக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜெய்ஸ்வால், மைதானத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமல் தீர்ப்பு எழுத வேண்டாம் என்றும், யாராவது எல்லை மீறினால் புதிய இந்தியா எப்போதும் எதிர்த்துப் போராடிப் பதிலடி கொடுக்கும் என்றும் தனது செயலை நியாயப்படுத்தியிருந்தார். ஐசிசியின் இந்த முரண்பாடான அறிக்கை கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போதும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.