📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 29, 2026 12:04 PM

மேட்டூர் அணையில் செப்.1

மேட்டூர் அணையில் செப்.1

13 டெல்டா மாவட்ட விவசாயம்

தமிழ்நாட்டின் 'நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 13 டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு மேட்டூர் அணையையே நம்பியுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியை மேற்கொள்ள ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.ஆனால், அவ்வாறு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட நாளில், அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடி என்ற நிலையிலேயே இருந்ததால், குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

குறுவை சாகுபடி பரப்பு குறைந்தது

இதனால், காவிரி தண்ணீரை நம்பியிருந்த டெல்டா விவசாயிகளால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியவில்லை. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளே குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர். இதனால், கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கராக இருந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு 3.78 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. அடுத்து சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்துவிடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

செப்டம்பர் 1-ந் தேதி திறப்பு

இந்த நிலையில், சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 1-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யே நேரடியாக சென்று அணையை திறந்துவைக்க இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 45 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நேற்று மாலை நிலவரப்படி 89.72 அடி தண்ணீரே இருப்பு உள்ளது. அதாவது, 52.33 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளதால், இது 45 நாட்களுக்கு போதுமானதாக இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் தேவை என்ன?

அதாவது, பாசனப் பகுதியின் கடைமடை வரை காவிரி நீர் செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டிய நிலை உள்ளது. தற்போது, மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு அதற்கு சாத்தியமானதாக இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அடுத்து அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு மழையை கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விவசாயிகள் சொல்வது என்ன?

டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு செப்டம்பர் 15-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை 12 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 268.47 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் தேவை இவ்வாறு இருக்க, மேட்டூர் அணையிலோ நீர் இருப்பு 89.72 அடியாக இருக்கிறது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பை செப்டம்பர் 1-ந் தேதி என்பதற்கு பதில், செப்டம்பர் 15-ந் தேதி என்று மாற்றினால், அணையில் தண்ணீர் குறையும் நேரத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.