ஸ்ரேயாஸ், பும்ராவை ஆசிய விளையாட்டு அணியில் இருந்து நீக்க உள்ளதாக பரவிய தகவல்.. பிசிசிஐ மறுப்பு
ஸ்ரேயாஸ், பும்ராவை ஆசிய விளையாட்டு அணியில் இருந்து நீக்க உள்ளதாக பரவிய தகவல்.. பிசிசிஐ மறுப்பு
மும்பை: ஜப்பானின் ஐச்சி-நகாயாவில் நடைபெறவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டு போட்டிக்கான (Asian Games) கிரிக்கெட் மைதான வசதிகள் குறித்து அதிருப்தி எழுந்துள்ளதால், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தனது 'பி' அணியை அனுப்ப இருப்பதாக வதந்திகள் பரவின. முன்பு அறிவிக்கப்பட்ட அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, திலக் வர்மா, அக்சர் பட்டேல் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்த நிலையில் அவர்களை நீக்கி உள்ளூர் வீரர்களை கூடுதலாக அனுப்ப இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு பிசிசிஐ தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஜப்பானில் உள்ள மைதானங்களில் வீரர்களுக்கான ஓய்வறைகள் தற்காலிக கூடாரங்களில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், கழிவறைகள் அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. மேலும், வீரர்களின் தங்குமிட அறைகள் மிகவும் சிறியதாக இருப்பதாக பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) அதிருப்தி தெரிவித்துள்ளன. இது குறித்து ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகளிடம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மைதான நிலவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய ஒரு கண்காணிப்பாளரை ஜப்பானுக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, வசதிகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் இந்தியா தனது 'பி' அணியை அனுப்ப பரிசீலிப்பதாக செய்திகள் பரவின. ஆனால், இந்த வதந்தியை மறுத்துள்ள பிசிசிஐ தரப்பு, வசதிகள் குறித்து கவலைகள் இருப்பது உண்மைதான் என்றாலும், 'பி' அணியை அனுப்பும் திட்டம் ஏதும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. திட்டமிட்டபடி இந்தியாவின் முன்னணி வீரர்கள் அடங்கிய முதன்மை அணியே ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த 2023 சீனா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அப்போது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அனுபவம் குறைந்த வீரர்களே இடம் பெற்று இருந்தனர். தற்போது ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முன்னணி வீரர்கள் அடங்கிய வலுவான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகளிர் பிரிவிலும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான வலுவான அணி ஜப்பான் செல்ல தயாராக உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் விவரம் பின்வருமாறு:
இந்திய ஆடவர் அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, ஜஸ்பிரித் பும்ரா.
இந்திய மகளிர் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஜி. கமலினி, பாரதி புல்மாலி, ஸ்ரீ சாருணி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், நந்தினி சர்மா.