நம்மளை நம்பி வராரு.. மாநாட்டுக்கு தயாராகும் தனுஷ்.. ரசிகர் மன்ற கூட்டத்தில் வந்த அறிவிப்பு!
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்த யூகங்கள் கடந்த சில நாட்களாகவே பரவி வரும் நிலையில், அவரது ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சு அந்த யூகங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 'அகில இந்திய தனுஷ் தலைமை ரசிகர் நற்பணி மன்ற' கூட்டத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் தனுஷ் இரு கரங்களைக் கூப்பி வணக்கம் செலுத்துவது போன்ற கம்பீரமான தோற்றத்துடன் கூடிய புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான ரசிகர் மன்றக் கொடி போல இல்லாமல், அரசியல் கட்சிக்குரிய பாணியில் வடிவமைக்கப்பட்டு இருந்த கொடி, இணையத்திலும் தமிழ்நாட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் கட்சியின் மாநாடு: இந்நிலையில், இன்று நடைபெற்ற ரசிகர் மன்றக் கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், நம்மை நம்பித்தான் அவர் வருகிறார். இப்போ நம்ம கட்சியின் பெயர் கூட அன்-அஃபிசியலா வெளியில போய்க்கிட்டு இருக்கு. கூடிய சீக்கிரமே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், கட்சியின் மாநாடும் வரப்போகுது. அதற்கான தகவல்கள் விரைவில் ஆதிகாரப்பூர்வமா வெளியாகும். உங்கள் அனைவரின் முழு ஆதரவும் தேவை, அவருக்கு ஆதரவு கொடுங்க என பேசி இருந்தார். நிர்வாகியின் இந்தத் தடாலடியான பேச்சு, தனுஷ் தனது அரசியல் பயணத்திற்கான முதற்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக நெட்டிசன்களும் அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உறுப்பினர் சேர்க்கை: ஏற்கனவே தமிழகம் முழுவதும் உள்ள தனுஷ் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாகச் செயல்பட்டு வந்த நிலையில், தனுஷ் தனது மன்றக் கட்டமைப்பை மாவட்ட அளவிலிருந்து சட்டமன்றத் தொகுதி வாரியாக விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.முதற்கட்டமாக கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமைத் தனுஷ் ரசிகர்கள் தொடங்கியுள்ளனர்.
சமூக நலப் பணிகள்: அதோடு மட்டுமில்லாமல், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, அன்னதானம், ரத்த தானம் என விஜய்யின் மன்றம் முன்னெடுத்த அதே சமுதாய நலப் பணிகளைத் தனுஷ் நற்பணி மன்றத்தினரும் செய்து வருகின்றனர். அரசியல் களத்தின் அடுத்த திருப்பமா? தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் சென்னை மஞ்சங்கரணையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் பேசிய தனுஷ், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து தனுஷ் பேசியது அரசியல் களத்தில் அவர் ஆழம் பார்க்கத் தொடங்கிவிட்டார் என்பதையே காட்டியது.