📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 31, 2026 11:03 PM

பாகிஸ்தான் அணியிலிருந்து 7 வீரர்களை வீட்டுக்கு அனுப்பிய நக்வி.. பயிற்சியாளரும் அதிரடி நீக்கம்

பாகிஸ்தான் அணியிலிருந்து 7 வீரர்களை வீட்டுக்கு அனுப்பிய நக்வி.. பயிற்சியாளரும் அதிரடி நீக்கம்

பாகிஸ்தான் அணியிலிருந்து 7 வீரர்களை வீட்டுக்கு அனுப்பிய நக்வி.. பயிற்சியாளரும் அதிரடி நீக்கம்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அணியில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அணியின் மோசமான செயல்பாடுகள் காரணமாக மூன்று முன்னணி பேட்ஸ்மேன்களான சல்மான் ஆகா, முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் உட்பட ஏழு வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து உடனடியாக தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக, பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணியின் பயிற்சியாளரான மைக் ஹெஸன் இறுதி டெஸ்ட் போட்டிக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அணியில் இருந்து நீக்கப்பட்ட அலி உஸ்மான், ஆமிர் ஜமால், உவைஸ் ஜாபர் மற்றும் குர்ரம் ஷாசாத் ஆகியோரும் பாகிஸ்தானுக்குத் திரும்புகின்றனர்.

நீக்கப்பட்ட வீரர்களுக்கு மாற்றாக சயீம் அயூப் மற்றும் அப்துல்லா ஃபசல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு இங்கிலாந்துக்கு விரைந்துள்ளனர். இவர்களுடன் அராஃபத் மின்ஹாஸ், முகமது இம்ரான் ஜூனியர், சாத் பைக், முகமது இம்ரான் ரந்தாவா மற்றும் ரசாவுல்லா ஆகிய சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத ஐந்து இளம் வீரர்களும் இங்கிலாந்துக்கான விசா அனுமதி கிடைத்தவுடன் அங்கு பயணிக்க உள்ளனர். புதிய பயிற்சியாளர் மைக் ஹெஸன் ஏற்கனவே அணியுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்விக்கு, அணியின் தொடர் தோல்விகள் காரணமாக அரசியல் ரீதியாக கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இரு போட்டிகளின் நான்கு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தான் அணியால் 200 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து முகமது ரிஸ்வான் வெறும் 61 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது தவறான ஷாட் தேர்வுகளும், பொறுப்பற்ற ஆட்டமும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின. அதே நேரத்தில், இமாம்-உல்-ஹக்கின் காயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது கால் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பேட்டிங் செய்யவில்லை என்று பிசிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இமாம்-உல்-ஹக் காயம் ஏற்பட்டது போல் போலியாக நடித்து ஏமாற்றுகிறார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வர்ணனையாளருமான ஸ்டூவர்ட் பிராட் குற்றம் சாட்டினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சந்தேகத்தை எழுப்பியதை அடுத்து, இமாம்-உல்-ஹக்கின் காயம் குறித்து முழுமையாக விசாரிக்க பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை அவர் பாகிஸ்தான் திரும்பியதும் நடத்தப்படும்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான சல்மான் ஆகா, பாபர் அசாம் இல்லாத லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்தினார். ஆனால் இரண்டாவது டெஸ்டில் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. தற்போது அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு தாயகம் அனுப்பப்பட்டுள்ளார்.