ரஹானேவின் செயல்பாடுகளுக்கு இவரை மாதிரி உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.. கவாஸ்கர் கருத்து
ரஹானேவின் செயல்பாடுகளுக்கு இவரை மாதிரி உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.. கவாஸ்கர் கருத்து
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியா ரஹானே அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், ரஹானேவின் கேப்டன்சி மற்றும் அவரது பங்களிப்பு குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ராகுல் டிராவிட்டின் வெற்றிகரமான தலைமைத்துவத்திற்கு எவ்வாறு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லையோ, அதேபோல ரஹானேவின் சிறந்த கேப்டன்சியும் உரிய பாராட்டைப் பெறவில்லை என்று கவாஸ்கர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
எப்போதும் ஆரவாரமில்லாமல், அமைதியாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் ரஹானே வல்லவர். விராட் கோலி இல்லாத சமயங்களில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு தனது தலைமைத்துவ திறமையை அவர் சிறப்பாக நிரூபித்துள்ளார்.
"ஒரு கேப்டனாக ரஹானேவின் சாதனைகள் அசாத்தியமானவை. அவர் வழிநடத்திய 6 டெஸ்ட் போட்டிகளில், இந்தியா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஒன்றில் கூட தோல்வியடையவில்லை. ராகுல் டிராவிட்டின் தலைமையில் இந்திய அணி சில அசாத்திய வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவருக்கு அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதேபோல் தான், ரஹானேவின் கேப்டன்சியும் தகுதியான பாராட்டைப் பெறவில்லை" என்று கவாஸ்கர் தனது பத்தியில் எழுதியுள்ளார்.
"இந்திய கிரிக்கெட்டில் இது ஒரு பொதுவான விஷயமாகிவிட்டது. அணி வெற்றி பெறும்போது, தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடிய பேட்டர்கள் அல்லது பந்துவீச்சாளர்களுக்கே ஒட்டுமொத்தப் புகழும் செல்கிறது. ஆனால், அணி தோற்கும்போது மட்டும் ஒட்டுமொத்த பழியும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீது சுமத்தப்படுகிறது" என்றும் கவாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார்.
"முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு சுருண்ட பெரும் ஏமாற்றத்திற்குப் பிறகு, ரஹானேவும் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தான் சரிவிலிருந்து அணியை மீட்டெடுத்தனர். மூழ்கும் நிலையில் இருந்த ஒரு கப்பலை வழிநடத்தி, ரஹானே சாமர்த்தியமாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்தார். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவின் கோட்டையாகக் கருதப்பட்ட காபா மைதானத்தில் இந்தியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெற்றியைப் பெற்றுத் தந்து, டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தார்" என்று கவாஸ்கர் தெரிவித்தார்.