தமிழகத்தின் பல்வேறு நூலகங்களுக்கு 6,500 புத்தகம் வழங்கிய மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசளிக்கப்பட்ட புத்தகங்களில் 6,500 புத்தகங்கள் மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு நேற்று வழங்கப்பட்டன. இதன் மூலம், தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த நூல்களில் இதுவரை மொத்தம் 6.5 லட்சம் புத்தகங்களை நூலகங்களுக்கு அவர் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள், அவருக்கு அளித்த புத்தகங்களை, தங்கள் கல்லூரி மற்றும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்க கோரிக்கை வைத்தனர்.
அதை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு மதுரை, கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரிக்கு 1,000 புத்தகங்கள், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரமகேந்திர கோட்டை புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகத்திற்கு 1,000 புத்தகங்கள், கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், தந்தை பெரியார் திராவிடர் நூலகத்துக்கு 500 புத்தகங்கள், தர்மபுரி மாவட்ட வழக்கறிஞர் அணிக்கு 2,000 புத்தகங்கள், வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய நூலகத்துக்கு 1,000 புத்தகங்கள், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மேல்வசலை கிராமம் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகத்துக்கு 1,000 புத்தகங்கள் என மொத்தம் 6,500 புத்தகங்களை நேற்று அண்ணா அறிவாலயத்தில் அந்தந்த நூலக நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதுவரை 6.5 லட்சம் புத்தகங்கள்: தனக்கு வரப்பெற்ற புத்தகங்களில் இதுவரை 6.5 லட்சம் புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு ஸ்டாலின் வழங்கியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.