📅 Saturday, 13 June 2026 IST | வைகாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 12, 2026 06:31 PM

தொடர் மின்வெட்டு: ``விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது"

தொடர் மின்வெட்டு: ``விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது"

தொடர் மின்வெட்டு: ``விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது" - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

மின்வெட்டு விவகாரத்தால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்ததிலிருந்து கடும் விமர்சனத்துக்குள்ளான விஷயம் மின்வெட்டு. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்னை தீவிரமாகியிருக்கிறது.

குறிப்பாக நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதியிலும் மின்வெட்டு பிரச்னை இருப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் விவாதமாகியிருக்கிறது. இந்த நிலையில், விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ-வும், தே.மு.தி.க கட்சித் தலைவருமான பிரேமலதா விஜயகாந்த் மின்வெட்டு தொடர்பாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், ``கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்குப் போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும் வேதனையையும் சந்தித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாகச் செயல்படுத்தப்படாதது ஒரு புறம்; மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மறுபுறம்.

"உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி" என்பதுபோல் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.