உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி.. காயத்ரி
உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி.. காயத்ரி - ட்ரிசா ஜோடி காலிறுதியில் அபார வெற்றி
டெல்லி: 2026 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ட்ரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மகளிர் இரட்டையர் பிரிவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு பதக்கம் உறுதியாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், இந்திய ஜோடி 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் பலத்த ஜோடியான ஜியா யி ஃபான், ஜாங் ஷு சியான் இணையை வீழ்த்தியது. முதல் செட்டை இழந்த போதிலும், அடுத்த இரண்டு செட்களில் அபாரமாக மீண்டு வந்து இந்திய வீராங்கனைகள் வெற்றியைப் பறித்தனர்.
இதற்கு முன்பு, கடந்த 2011 ஆம் ஆண்டு ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. அதன்பிறகு 14 ஆண்டுகளாக இந்தியாவால் உலக சாம்பியன்ஷிப் அரங்கில் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்ல முடியாமல் இருந்தது. தற்போது ட்ரிசா, காயத்ரி ஜோடி அந்த நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சீன ஜோடிக்கு எதிராக இதற்கு முன் விளையாடிய 3 போட்டிகளிலும் ட்ரிசா, காயத்ரி ஜோடி தோல்வி அடைந்திருந்தது. இதனால் இப்போட்டி பெரும் சவாலாகவே பார்க்கப்பட்டது. முதல் செட்டில் சில தவறுகளால் இந்திய ஜோடி 16-21 எனப் பின்னடைவைச் சந்தித்தது. இந்த செட்டில் 57 ஷாட்கள் கொண்ட நீண்ட ரேலி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால், இரண்டாவது செட்டில் ஆக்ரோஷமாக விளையாடி 21-15 என வென்று பதிலடி கொடுத்தது. மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்களின் உற்சாக கோஷங்கள் வீராங்கனைகளுக்கு பெரும் பலமாக அமைந்தது. பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் அவர்களைப் பதற்றமின்றி விளையாடுமாறு அறிவுறுத்தினார்.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிலும் இந்திய வீராங்கனைகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீன வீராங்கனைகளின் தவறுகளைப் பயன்படுத்தி, 21-13 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் எளிதாகக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தனர்.
முந்தைய சுற்றுகளில் ஒரு செட்டைக் கூட இழக்காமல் வெற்றி பெற்றிருந்த ட்ரிசா - காயத்ரி ஜோடி, இப்போட்டியிலும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 2011 முதல் தொடர்ந்து பதக்கங்களை வென்று வரும் சாதனையை இந்த ஜோடி இதன் மூலம் காப்பாற்றியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இவர்கள், அதிலும் வென்று இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.