“விஜய் அடுத்த பிரதமராக வேண்டும்”.. அமைச்சர் விக்னேஷ் ஓபன் டாக்!
“விஜய் அடுத்த பிரதமராக வேண்டும்”.. அமைச்சர் விக்னேஷ் ஓபன் டாக்!
டாஸ்மாக் முறைகேடுகள், மதுவிலக்கு மற்றும் தவெக கூட்டணி குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்ததுடன், விஜய் அடுத்த பிரதமராக வேண்டும் என தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் ஆளும்தரப்பை நோஸ்கட் செய்ய எதிரணியும், அதற்கெல்லாம், தக்க தரவுகளுடன் பதிலடி கொடுக்க த.வெ.க அணியும் ஹோம் ஒர்க் செய்வதில் பரபரப்பாகி இருக்கின்றன. இதற்கு நடுவிலும் டாஸ்மாக் துறை சீர்திருத்தங்கள், மதுபானத் தடை நீக்க விமர்சனம் என விறுவிறுவென இயங்கிக்கொண்டிருக்கிறார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ். அவரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
பார்ட்டி ஃபண்ட் விவகாரத்தை நீங்கள்தான் கண்டறிந்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தீர்களா?
"உண்மைதான். டாஸ்மாக் துறையில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி விசாரித்தபோது, ஒரு கேஸ் மதுவுக்கு ரூ90, பியருக்கு ரூ.40, ஒயினுக்கு ரூ.20 என தனியாக மினிஸ்டர்களுக்கு கமிஷன் போகும். இதற்கு பேர் கட்சி நிதி என்றனர். இதை முதல்வரிடம் கட்சி நிதி என்று வருஷத்துக்கு கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வரை முறைகேடு நடக்கிறது' என்றேன். அவரும், 'அதை அரசு கஜானாவுக்கு வரவு வைக்க செய்யவேண்டியதை செய்யுங்க' என்றார். அதன்படி அந்த நிதியை அரசு கஜானாவுக்கு கொண்டுவந்திருக்கிறோம்."
கடந்த ஆட்சிக்காலங்களில் எவ்வளவு பணம் இப்படி வேறு வழிகளில் வெளியே போயிருக்கிறது?
"எல்லோருக்கும் இப்போது பார்ட்டி ஃபண்ட் தான் தெரியும். பாட்டில் ஃபண்ட் என்று இன்னொன்று இருக்கிறது. இது பார்ட்டி ஃபண்டைவிட பெரிய விஷயம் நான் அமைச்சராக வந்தபிறகு இதுவரை தனிநபர்கள் கைக்கு போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாயை (ஆண்டுக்கு) அரசு கஜானாவுக்கு கிட்டத்தட்ட கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம். மீதி விஷயங்களை மானியக் கோரிக்கையின்போது சொல்கிறேன்.
ஃபைலை ஓபன் பண்ண வெச்சுடாதீங்க' என்கிறாரே முதல்வர். தி.மு.க.வுக்கான மிரட்டலா இது?
'உங்களைப் பற்றிய மூன்று பெரிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. விசாரணை முடிவில் கட்டாயம் தண்டிக்கப்படுவீர்கள். அதை உடனடியாக திறக்கவைத்து விடாதீர்கள்' என்றுதான் முதல்வர் சொன்னார். எதிர்க்கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவை உடனடியாக திறக்கப்பட்டுள்ளன."
போதை ஒழிப்பு பேசும் அரசு... ஆன்லைனில் மது விற்பனையை எளிமையாக்குவது சரிதானா?
"பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பதை ஒழிக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவந்த திட்டம் அது. மாறாக, 'முன்கூட்டியே மதுவை புக் செய்து வைத்துக்கொள்வார்கள். வீட்டுக்கே கொண்டுவந்து கொடுப்பார்கள்' என்றெல்லாம் தவறாக சித்தரித்துவிட்டார்கள்."
டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்களே?
2003ல் டெபாசிட் கட்டி பணிக்கு வந்த பணியாளர்கள், பணி நிரந்தரம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஊதிய உயர்வே கடந்த ஆட்சியில் தரப்படவில்லை. நாங்கள் கொடுத்த 25 சதவிகித ஊதிய உயர்வுக்குப் பிறகும் ஊழியருக்கு சராசரியாக 14 ஆயிரம்தான் சம்பளம். ஊழியர்களின் சூழலைப் பொறுத்துத்தான் பிரச்னைகளை அணுகுகிறோம். 'ரூ.10 வாங்குபவர்களை டிஸ்மிஸ் செய்வேன்' என சொல்லிவிட்டால், அந்த ஊழியர்களின் நிலை என்னவாவது? எனவே, ஊதிய உயர்வுப் பற்றி அவர்களுடன் பேசிவருகிறோம். பணி நிரந்தரம் செய்கிறோமா என்பதை முதல்வர்தான் முடிவெடுப்பார்."
உங்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழத் தொடங்கியிருக்கிறதே?
"அமைச்சரானத் தொடக்கத்தில் என்னைப்பற்றி ஒரு செய்தி வந்தபோது பதறிவிட்டேன். முதல்வரிடமே அதை சொன்னேன், அவரோ சிரித்துவிட்டு, 'இதெல்லாம் வரத்தான் செய்யும். நீ இதையெல்லாம் பார்த்து டிஸ்டர்ப் ஆகாதே!" என்றார். இப்போது 100 கோடியோ, 100 ஏக்கரோ நான் வாங்கிவிட்டதாக அவதூறு பரப்புகிறார்கள். என் துறையை சீரமைக்கும் வேலையில் இறங்கியதால் எதிரிகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனால்தான் அவதூறு பரப்புகிறார்கள்."
11 மதுபானங்களுக்கு தடைவிதித்த வேகத்தில் அத்தடையை நீங்கள் திரும்ப பெற்றுவிட்டதாக வரும் விமர்சனம் பற்றி?
"அந்த தடையை விதித்தது மத்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறை அவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் மதுவை கொள்முதல் செய்யக்கூடாது என சொன்னதால், 'வாங்காதீர்கள்' என்று சொன்னோம். அடுத்த நாளே, மத்திய அரசு தரப்பில் உத்தரவை வாபஸ் பெற்றதாக இன்னொரு கடிதம் வரவே, அதன்படி எங்களின் உத்தரவை வாபஸ் பெற்றோம்."
சட்டமன்றத்தில் த.வெ.க., தி.மு.க.வினரை அதிகம் வம்பிழுப்பதாக தெரிகிறதே?
‘எதிர்வரிசையில் சில எம்.எல்.ஏ.க்களின் ரியாக்ஷன்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அவ்வளவு கோபப்படுத்துவார்கள். எங்களை தவறாக காட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு பதில் மட்டும்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இன்னும் கோபப்படவே இல்லை."
சட்டசபையில் த.வெ.க. அமைச்சர்கள் டேக் டைவர்ஷன் பாலிடிக்ஸ் செய்வதாக வரும் விமர்சனம் பற்றி?
"நியாயமான கோரிக்கை வைத்தால் நியாயமான பதில் இருக்கும். எங்கள் அமைச்சர் ஒருவர் 'கருணாநிதி' என்ற பெயரை சொன்னதற்கே எங்கள் முதல்வர் எழுந்து 'சாரி' கேட்டார். அந்த அளவுக்கு பண்போடுதான் த.வெ.க. நடந்துக்கொண்டிருக்கிறது."
த.வெ.க. கூட்டணிக் கட்சியினர் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்களே, கூட்டணியில் விரிசலா?
"எங்கள் கூட்டணி ஒரு ஜனநாயகக் கூட்டணி. யாராக இருந்தாலும் அவர்களின் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. அதற்கு நாங்கள் எதிர்க்கருத்தும்கூட சொல்லலாம். கடந்த ஆட்சியில் இருந்ததுபோல, கூட்டணி என்கிற பெயரில் கடைசிவரை எந்த கருத்தும் சொல்லக்கூடாது என்று இருக்கப்போவதில்லை."
விஜய்யை அடுத்த பிரதமர் என்கிறீர்களே?
“ஏன், தமிழகத்திலிருந்து அடுத்த பிரதமர் வரக்கூடாதா? விஜய்யை நாங்கள் அடுத்த பிரதமர் என சொல்லவே கூடாதா? அவர் பிரதமர் ஆகவேண்டும் என எனக்கும் ஆசைதான். அதற்கு மேலும் அவர் போக வேண்டும். அமைச்சர் ஆதவ் 'தென் மாநிலங்களில் இருந்து பிரதமர் வரவேண்டும்' என்றாரே ஒழிய, த.வெ.க. என அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒருவேளை அப்படி குறிப்பிட்டால்தான் என்ன தவறு?"