2 ஃபாஸ்ட் பவுலிங் ஆல்
2 ஃபாஸ்ட் பவுலிங் ஆல்-ரவுண்டர்களும் ரெடி.. இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஆட வாய்ப்பு
மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் முழு உடற்தகுதியை எட்டியுள்ளனர்.
அடுத்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட தயாராக உள்ளனர். கடந்த 5 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய சிறப்பு பயிற்சி மையத்தில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு முழு உடற்தகுதியை அடைந்துள்ளார். அவருடன் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டியும் முழு வீச்சில் பந்துவீசி பயிற்சி பெற்று வருகிறார்.
இதற்கிடையே, மற்றொரு சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் தனது உடற்தகுதியை நிரூபிக்க தீவிரமாக முயன்று வருகிறார். வார இறுதி நாட்களை சென்னையில் கழித்த அவர், விரைவில் பெங்களூரு திரும்பி தனது உடற்தகுதியை நிரூபிக்க உள்ளார். ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்பாக அவர் முழுமையான தகுதிச் சான்றிதழைப் பெற்று அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் இந்த வாரம் கூடி ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியை அறிவிக்க உள்ளனர்.
அதே நேரத்தில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதியும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஆப்கானிஸ்தான் தொடரில் ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், எவ்வித பின்னடைவும் ஏற்படாத பட்சத்தில் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2 வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் ஒரே நேரத்தில் அணிக்குத் திரும்புவது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. சமீபத்தில் நடந்த இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன் பல இந்திய வீரர்கள் காயத்தில் சிக்கியது பெரும் சர்ச்சையாக மாறி இருந்தது. தற்போது அதில் பலரும் மீண்டு இருப்பது இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.