2027 ஆகஸ்டுக்குள் மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும்: சொல்கிறார் கர்நாடக அமைச்சர்
மாண்டியா: மேகதாது அணைக்கு 2027ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் செலுவராயசாமி கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது;
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற தேவையான நிலம் 12,500 ஏக்கர். ஆனால் நாங்கள் 20,000 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளோம்.
காவிரி பிரச்னையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு மேகதாது அணை கட்டப்பட வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்பம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளின் அதிகாரிகள் விடா முயற்சியுடன் பணியாற்றுவர்.
தினசரி அதன் பணிகளை கண்காணிக்க டில்லியில் இரு நீர்ப்பாசன அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. 2027ம் ஆண்டு ஆகஸ்டுக்குள் அடிக்கல் நாட்டுவதே எங்களின் இலக்கு.
இம்மாதம் இறுதி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் செப்டம்பருக்குள் கேஆர்எஸ் அணை நிரம்பி விடும் என எண்ணுகிறோம். நாங்கள் தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு திறந்து விட மாட்டோம் என்று சொல்லவில்லை. 3,500 கனஅடி நீர் திறந்து விட உத்தரவு வந்த போதே அதை விட அதிக தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இப்போது 12,000 கனஅடி நீர் திறந்தவிட சொல்லி இருக்கிறார்கள். அதில் 1000 கன அடி நீர் கபினியில் இருந்து செல்கிறது.
இவ்வாறு செலுவராயசாமி கூறினார்.