சீனியர்களுக்கு முன் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி.. நேற்று கேப்டன்சி, இன்று 42 பந்துகளில் அரைசதம்
சீனியர்களுக்கு முன் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி.. நேற்று கேப்டன்சி, இன்று 42 பந்துகளில் அரைசதம்
பெங்களூர்: 2026 துலீப் டிராபி அரையிறுதிப் போட்டியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். கிழக்கு மண்டல அணியின் தற்காலிக கேப்டனாக முதல் நாள் அன்று செயல்பட்டு சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கிலும் முத்திரை பதித்துள்ளார்.
பெங்களூருவில் மத்திய மண்டல அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் மத்திய மண்டல அணி 266 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டல அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷி அதிரடி தொடக்கம் தந்தார். நேற்று இஷான் கிஷன் காயமடைந்து வெளியேறிய போது தற்காலிக கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்ட வைபவ், பேட்டிங்கிலும் அணியை முன்னின்று வழி நடத்தினார்.
மத்திய மண்டல அணியில் ரஜத் படிதார், ரிங்கு சிங் போன்ற அனுபவ வீரர்கள் இருந்தபோதிலும், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி சிறிதும் பயமின்றி விளையாடினார். இந்த ஆட்டத்தின் போது வைபவ் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். வெறும் 42 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்து அசத்தினார். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த அவரை, சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான பந்துவீச்சாளர் சரண்ஷ் ஜெயின் தனது சுழலில் கட்டுப்படுத்தினார். சரண்ஷ் ஜெயின் வீசிய அந்த ஓவரில் வைபவ்வால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
எனினும், அதற்கடுத்த 15-வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி வைபவ் சூர்யவன்ஷி 42 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். முன்னதாக, வடகிழக்கு மண்டலத்திற்கு எதிரான கால்இறுதிப் போட்டியில் வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து வைபவ் ஏமாற்றம் அளித்து இருந்தார். ஆனால், தற்போது முதல்தர மற்றும் சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் தம்மால் மிக வேகமாக விளையாடி ரன் குவிக்க முடியும் என்பதை இந்த அதிவேக இன்னிங்ஸின் மூலம் அவர் நிரூபித்துள்ளார்.