சிங்கப்பூர் வருகை அட்டை: புதிய தோற்றம் மற்றும் வசதிகள்
சிங்கப்பூர் வருகை அட்டை (SGAC) விரைவில் புதிய தோற்றத்தைப் பெறவுள்ளது.
பயணிகள் விரைவாக விவரங்களைச் சமர்ப்பிக்கும் வகையில் 19 மொழிகள், கடவுச்சீட்டை மின்வருடல் செய்து தகவல்களைத் தானாகப் பூர்த்தி செய்யும் வசதி ஆகியவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்த புதிய அம்சங்கள் ‘மைஐசிஏ’ (MyICA) செயலியிலும் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் இணையத்தளத்திலும் கிடைக்கப்பெறும். பயணிகள் இவற்றை ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் இணையத்தளத்தில் சோதித்துப் பார்க்கலாம் என்று ஆணையம் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்குள் நுழைவதற்குமுன் அனைத்துப் பயணிகளும் இந்த எஸ்ஜி வருகை அட்டைக்கான விவரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். குடிநுழைவுச் சோதனை இன்றி வேறு இடங்களுக்குச் செல்லும் பயணிகள், உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச்சோதனைச் சாவடிகள் வழியாகப் பயணம் செய்யும் சிங்கப்பூர்வாசிகளுக்கு இதில் விலக்கு உண்டு.
புதிய மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு பயனீட்டாளர்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது. கூடுதல் தகவல்களுக்கு ஆணையத்தைத் தொடர்புகொண்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.