எங்களையே வெளியேற சொல்வதா? வனத்துறையைக் கண்டித்து தேனி மாவட்ட மலைவாழ் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
எங்களையே வெளியேற சொல்வதா? வனத்துறையைக் கண்டித்து தேனி மாவட்ட மலைவாழ் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
நீதிமன்றம் தீர்ப்பளித்தும் முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில் மக்களை வெளியேற்றுவதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
Published : August 7, 2026 at 6:06 PM IST
தேனி: மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வனத்துறையைக் கண்டித்து 5,000- க்கும் மேற்பட்ட மக்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாக மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாய தொழிலை மேற்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்கள், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வன உரிமைக் குழுக்கள் ஆகியவை சார்பில் இன்று (ஆக.07) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேகமலை, வருசநாடு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் கவந்து கொண்டனர்.
100 வருடங்களாக வன நிலங்களில் விவசாயம் செய்து வரும் குடும்பங்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும், 2006 வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டு மனைப்பட்டா, நிலப்பட்டா வழங்கக் கோரியும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக ரத்துச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், அதிமுக, தவெக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலைவாழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தனர்.
போராட்டத்தில் பேசிய தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், "தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 30 ஆண்டுகளில் இந்த அளவுக்கு ஒரு பெரிய போராட்டத்தை இதுவரை பார்த்ததில்லை. எங்கள் சொத்தை, எங்களுக்கு கொடுத்துவிட்டு மீதி சொத்தை வனத்துறை எடுத்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் தீர்ப்பளித்தும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை; ஆனால் மக்களை வெளியேற்றுவதில் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விடுமுறை எடுத்து உங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். நீங்கள் ஓட்டுப் போட்டு வெற்றி பெற்ற நான் உங்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஏதாவது விபரீதம் செய்தால் என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்" என்று ஆவேசமாக பேசினார்.
வனத்துறையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பிய மலைவாழ் மக்கள், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்து தங்களுக்கு பட்டா வழங்க ஆவன வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, போராட்டம் காரணமாக காவல் துறையினர் பேரிக்காடுகளை அமைத்திருந்தனர். அத்துடன், திண்டுக்கல் சரக டிஐஜி சசி மோகன், தேனி மற்றும் மதுரை மாவட்ட எஸ்.பி.க்கள், 8 ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.