மோடியின் கோரிக்கையால் கிடுகிடுவென சரிந்த டைட்டன், கல்யாண் பங்கு விலை
அவசியமான சூழலில் தவிர தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து செவ்வாய்க்கிழமையான இன்று டைட்டன் கம்பெனி, ஸ்கை கோல்ட் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட நகை நிறுவனங்களின் பங்குகள் 6% வரை சரிவைச் சந்தித்தன.இன்றைய வர்த்தகத்தில், டைட்டன் கம்பெனி பங்குகள் 2% சரிந்து ரூ. 5,015-க்கும், கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் 6% சரிந்து ஒரு பங்குக்கு ரூ. 578-க்கும் வர்த்தகமாயின. பிஎஸ்இ சந்தையில் தங்கமயில் ஜூவல்லரி பங்குகள் 2% சரிந்து ரூ. 5,322-க்கும், ஸ்கை கோல்ட் பங்குகள் 6.3% சரிந்து ஒரு பங்குக்கு ரூ. 756-க்கும் வர்த்தகமாயின.நாட்டு மக்களுக்கு பிரதமர் தங்கம் வாங்க வேண்டாம் என கோரிக்கை விடுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு மே மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த ஓராண்டுக்குத் திருமணங்களுக்காகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். எரிபொருள் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பைச் சேமிக்கும் நோக்கிலான வேண்டுகோளின் ஒரு பகுதியாகவே இந்தக் கோரிக்கை இருந்தது. அத்துடன்,work-from-home முறையை மீண்டும் பின்பற்றுமாறும், சர்வதேசப் பயணங்கள் உள்ளிட்ட அவசியமற்ற பயணங்களைக் குறைக்குமாறும் பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.உலக அளவில் தங்கம் நுகர்வில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2026 நிதியாண்டில் மாதந்தோறும் சராசரியாக 60 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு மாதத்திற்கு சுமார் 6 பில்லியன் டாலராகும்.இந்தியக் குடும்பங்களைப் பொறுத்தவரை, தங்கம் என்பது பாரம்பரியம், பாதுகாப்பு, திருமணம், சேமிப்பு மற்றும் தலைமுறை சார்ந்த சொத்து ஆகியவற்றின் அடையாளமாக உள்ளது. எனவே, பிரதமரின் இந்தக் கருத்துகள் வழக்கத்திற்கு மாறானதாகவும் அதே சமயம் முக்கியமானதாகவும் கருதப்படுகின்றன.வரலாற்று ரீதியாக, குறிப்பாக நிச்சயமற்ற காலங்களில், இந்தியக் குடும்பங்களுக்குத் தங்கம் பாதுகாப்பான நீண்டகாலச் சொத்து சேமிப்பு முறையாகக் கருதப்படுகிறது. இதனாலேயே பிரதமரின் கருத்துகள் சந்தையில் உடனடி மற்றும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தின. திங்களன்று முதலீட்டாளர்கள் அவசர அவசரமாகப் பங்குகளை விற்றதால் நகை நிறுவனங்களின் பங்குகள் 9% வரை சரிந்தன.ஆனால் சந்தையின் உடனடி எதிர்வினையைத் தாண்டி, பிரதமரின் இந்த வேண்டுகோள் ஒரு பெரிய பேரியல் பொருளாதாரக் கவலையை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது. அதாவது, உலகளாவிய நிச்சயமற்ற சூழல், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு மீதான அழுத்தம் நிலவும் இக்காலகட்டத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்புக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதே இதன் நோக்கமாகும்.ஜெஃபரீஸின் உலகளாவிய பங்கு உத்தித் தலைவர் கிறிஸ்டோபர் வுட் மற்றும் பில்லியனர் ஹெட்ஜ் ஃபண்ட் மேலாளர் ஜான் பால்சன் ஆகியோரின் கூற்றுப்படி, சமீபத்திய சரிவு முதலீட்டாளர்களுக்கு படிப்படியாக தங்கத்தைக் குவித்துக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கக்கூடும். இந்த விலைமதிப்புள்ள உலோகம் ஒரு நீண்ட கால ஏற்றத்தின் தொடக்கத்தில் இருக்கலாம்.மற்ற முதலீடுகள் மீதான நம்பிக்கையை இழக்கும்போது, ஒரு மாற்றாக தங்கம் தொடர்ந்து வளரும் என்று பால்சன் கூறினார். சப்-பிரைம் அடமானங்களுக்கு எதிரான அவரது பந்தயம் வால் ஸ்ட்ரீட் வரலாற்றில் மிகவும் லாபகரமான வர்த்தகங்களில் ஒன்றாக மாறியது. இந்த பில்லியனர் 2009-ல் தங்கத்தின் மீது தனது கவனத்தைத் திருப்பினார்.நிதி நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிதி மற்றும் பணவியல் ஊக்க நடவடிக்கைகள் இறுதியில் அமெரிக்க டாலரை பலவீனப்படுத்தும் என்று பால்சன் வாதிட்டிருந்தார். அதன் பிறகு, தங்கத்தின் விலை சுமார் நான்கு மடங்கு அதிகரித்து, $5,000 என்ற நிலையை தாண்டி சென்றது.மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பை அதிகரிப்பதாலும், தனியார் துறையின் ஆர்வம் உயர்வதாலும், தங்கத்திற்கான தேவை தொடர்ந்து அதிரித்து வருகிறது.