📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 02, 2026 01:05 PM

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை: ஒரு ரேஷன் அட்டைக்கு எத்தனை கிலோ கிடைக்கும் தெரியுமா..?

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை: ஒரு ரேஷன் அட்டைக்கு எத்தனை கிலோ கிடைக்கும் தெரியுமா..?

தமிழகத்தில் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், மக்கள் நலன் மற்றும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், சந்தை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

அந்த வகையில் வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் (பல்லாரி) கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையும், சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100 வரையும் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வெங்காயம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்களை கூறிய அவர் குறிப்பாக ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்ததால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. மேலும், அதிகளவில் வெங்காயம் உற்பத்தியாகும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததே தற்போதைய விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். அதன்படி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தேசிய வேளாண்மை கூட்டுறவு அமைப்புகள் (NAFED/NCCF) மூலம் முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயத்தை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.

முதற்கட்டமாக, நகர்ப்புற பகுதிகளில் உள்ள 8,739 நியாய விலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மற்றும் அமுதம் அங்காடிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளதாகவும், இது தமிழ்நாட்டில் உள்ள மொத்த குடும்ப அட்டைகளில் சுமார் 35 சதவீதம் எனவும் அவர் கூறினார்.

நாளை முதல் ( செப்டம்பர் 3-ம்தேதி) தமிழகத்தில் உள்ள நகர்ப்புற ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு (ரேஷன் அட்டை ஒன்றுக்கு) ஒரு கிலோ வீதம் வெங்காயம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

வெங்காயம் இந்தியர்கள் அன்றாடம் உணவில் சேர்த்து பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருளாகும். ஆனால் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ வெங்காயம் என்பது மிகவும் குறைவான அளவே என்று சாமானிய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் என்பது பத்தாது, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இதை 3 முதல் 5 கிலோவாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். வெளிச்சந்தையில் வெங்காய விலை உயரும் போது, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ரேஷன் விநியோகம் மட்டுமே பெரிய உதவியாக இருக்கும்.

மக்களின் இந்த கோரிக்கைகள் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுத் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வெங்காய உற்பத்தி, கொள்முதல் விலை மற்றும் அரசின் இருப்பு அளவைப் பொறுத்தே அளவை உயர்த்துவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்க முடியும்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் வெங்கடரமணன், வரும் நாட்களில் தேவையின் அடிப்படையில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கூடுதலாக வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

வெங்காயம் பதுக்கலை தடுக்கவும், கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.