முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்: முன்னாள் அதிமுக எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை!
முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்: முன்னாள் அதிமுக எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை!
திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், ஆண்டரசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 69 வயதான என்.எஸ். ஜெகநாதன். இவர் கடந்த 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு லலிதா என்ற மனைவியும், சடகோபன், மதன் ஆகிய இரண்டு மகன்களும், சுஜாதா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், முதல் மனைவி லலிதாவுக்கு தெரியாமல் வனிதா என்பவரை ஜெகநாதன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இதையடுத்து, தனது கணவரான முன்னாள் எம்.பி. என்.எஸ். ஜெகநாதன் தனக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, அவரது முதல் மனைவி லலிதா கடந்த 2016ஆம் ஆண்டு திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் எம்.பி. என்.எஸ். ஜெகநாதன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி வனிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் ஜே.எம். முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் வினோத், முன்னாள் எம்.பி. என்.எஸ். ஜெகநாதனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், பிணை வழங்குமாறும் ஜெகநாதன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து, ரூ.10 ஆயிரம் பிணைப் பத்திரத்துடன் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி.க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.