`முதல்வர் அறையை நவீனமாக மாற்றுகிறார்; அவர் நடிகர் ஆடம்பரமாக தான் இருப்பார்'
`முதல்வர் அறையை நவீனமாக மாற்றுகிறார்; அவர் நடிகர் ஆடம்பரமாக தான் இருப்பார்'- எடப்பாடி பழனிசாமி சாடல்
அண்ணா, நமக்கு எதிரியாக இருந்தாலும் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நான், ஸ்டாலின் அந்த அறையை பயன்படுத்தினோம். இவருக்கு அறை தான் முக்கியம். மக்கள் முக்கியமில்லை. முதல்வர் ஜோசப் விஜய் வேறு இடத்தில் அறையை நவீனமாக அமைக்கிறார்- எடப்பாடி பழனிசாமி
தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி வருவதாக தவெக அரசைக் கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குதிரை பேர அரசு, பொய்க்கால் குதிரை அரசு என தவெக அரசை விமர்சித்து கோஷம் போடப்பட்டது.
இதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல வெளிமாநிலங்களுக்கும் உணவு கொடுக்கும் பொன்விளையும் பூமியான தஞ்சை டெல்டா இன்று வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூரில் போதிய நீர் இல்லை என்று கூறி தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆட்சி பொறுப்பேற்றவுடன் தவெக அரசு, மத்திய அரசு மூலம் கர்நாடகாவிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் ரீல்ஸ் விடுவதிலேயே காலத்தை வீணடித்தனர். இதனால் ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகஸ்ட் மாதம் தேவையான 45.95 டி.எம்.சி தண்ணீரை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன் காரணமாக வழக்கமாக 5 லட்சம் ஏக்கரில் நடைபெறும் குறுவை சாகுபடி, இந்த ஆண்டு நிலத்தடி நீரை நம்பி 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே நடந்தது. அதற்கும் 16 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டதால் 40 நாள்களில் நிலத்தடி நீர் வற்றி 1 லட்சம் ஏக்கர் கருகி நாசமானது. இது குறித்து சட்டமன்றத்தில் காமராஜ், மணிமாறன் ஆகிய எம்.எல்.ஏ-க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும், அரசு செவிசாய்க்கவில்லை. எனவே கருகிய பயிர்களை கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்.
பருவமழை பொய்த்ததால் விவசாயிகளால் கூட்டுறவு சங்க கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. தேர்தல் அறிக்கையில் தவெக தலைவர் ஜோசப் விஜய் 5 ஏக்கருக்கு குறைவான சிறு, குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு பாதி தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் வேளாண் பட்ஜெட்டில் அதை நிறைவேற்றவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடியும் கண்துடைப்பு. அதிமுக ஆட்சியில் ஒரு குடும்ப அட்டையில் 3 பேர் கடன் வாங்கியிருந்தால் 3 பேருக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்த அரசு குறைவாக கடன் வாங்கிய ஒருவருக்கு மட்டும் தள்ளுபடி செய்கிறது. Overdue இருந்தால் தள்ளுபடி இல்லை. ரூ.75,000-க்கு மேல் ஒரு ரூபாய் அதிகம் வாங்கியிருந்தாலும் ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி என்பது என்ன நியாயம்?
ஜெயலலிதா, 2011-ல் வாக்குறுதி கொடுத்து கடனை தள்ளுபடி செய்தார். நான் முதலமைச்சராக இருந்தபோது கொரோனா காலத்தில் ரூ.12,110 கோடி கடனை அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்தோம். 2016-ல் ஒருமுறை, 2021-ல் ஒருமுறை என இரண்டு முறை கடன் தள்ளுபடி செய்த ஒரே அரசு அதிமுக தான். எனவே முழு கடனை தள்ளுபடி செய்ய முடியாவிட்டாலும் தேர்தல் வாக்குறுதிப்படியாவது தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையேல் விவசாயிகள் எதிர்காலத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள். கொடுப்போம் என்று கோட்டையில் இருக்குற முதலமைச்சருக்கு கேட்க வேண்டும்.
விவசாயிகள் வெயிலில் காய்கிறார்கள். ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார். நாட்டில் எவ்வளவு பிரச்னை நவீன அறை வேண்டுமாம். ஏன் அந்த அறை பத்தாதா. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நான், ஸ்டாலின் அந்த அறையை பயன்படுத்தி பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு நிறைவேற்றினோம். இவருக்கு அறை தான் முக்கியம். மக்கள் முக்கியமில்லை. அறை நவீனமா இருக்கணுமாம். விவசாயிகள் சோத்துக்கு திண்டாடி கொண்டிருக்கின்றனர்.
இவருக்கு ரூம் வசதி பத்தவில்லை. அவர் நடிகர் அப்படிதான் இருப்பார். எல்லாம் தலையெழுத்து என்ன செய்றது. ராத்திரி, பகலா உழைக்குற விவசாயிகளை பற்றி கவலைபடாதவர் இன்றைய முதலமைச்சர். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள். ஆனால் விவசாயிகளை வஞ்சிக்காதீர்கள். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பயிர் கடனை தள்ளுபடி செய்யுங்கள். 1986-ல் எம்.ஜி.ஆர் பலமுறை கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி பிரச்னையில் உடன்பாடு ஏற்படாததால் தான் நீதிமன்றம் சென்றோம். ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி 4 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார்.
அதற்காக தஞ்சை மக்கள் அவருக்கு பொன்னியின் செல்வி பட்டம் கொடுத்தனர். எனது ஆட்சியில் 50 ஆண்டு கால பிரச்னைக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் என்ற வரலாற்று தீர்ப்பை பெற்றோம். பாஜக கூட்டணியில் இருந்தபோதும் 37 எம்.பி.க்களை வைத்து 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி மேலாண்மை ஆணையத்தை பெற்றது அதிமுக. உச்ச நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காத கர்நாடகாவிடம் மீண்டும் போய் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்பது காலம் தாழ்த்தும் செயல். ஜூன் மாதமே கேட்டு கிடைக்காவிட்டால் உடனே உச்ச நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். அனைத்துக்கட்சி கூட்டத்தையும், டெல்டா விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்று கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளே கோரியும் முதல்வர் கேட்கவில்லை. இதுபற்றி பேசிய அமைச்சர் கட்சியில் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறது, அவருக்கு வரலாறு தெரியாது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சம் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன, மேலும் 10 லட்சம் மூட்டைகள் விவசாயிகளிடம் விற்பனைக்கு காத்திருக்கின்றன. திறந்தவெளியில் மழையில் நனைந்து முளைத்து வீணாகிறது. உடனே கிடங்குக்கும், அரவை ஆலைக்கும் கொண்டு செல்ல வேண்டும். இப்போது மேட்டூருக்கு வருவது கபினி அணை நிரம்பி வரும் உபரி நீர் தான், நமது உரிமை நீர் அல்ல. மேட்டூரில் 80 அடி மட்டுமே உள்ளதால் சம்பா சாகுபடிக்கு போதாது. காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி தினமும் 1 டி.எம்.சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா பாலைவனமாகும், 20 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கும், அதை முறியடிக்க வேண்டும். வறண்ட ஏரி, குளங்களில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த குடிமராமத்து திட்டம் போல வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும். மேட்டூர் நீர் கடலில் கலக்கும் வரை சுத்தமாக இருக்க ரூ.11,000 கோடியில் மத்திய அரசு அனுமதியுடன் கொண்டு வந்த நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவில்லை, தற்போது தவெக அரசு செயல்படுத்துவதாக கூறியுள்ளது. செய்யாவிட்டால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக செயல்படுத்தும்" என்றார்.