📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 29, 2026 03:03 PM

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ₹1,000 கோடி வசூல் செய்யும்: சத்யராஜ் உறுதி

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ₹1,000 கோடி வசூல் செய்யும்: சத்யராஜ் உறுதி

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ₹1,000 கோடி வசூல் செய்யும்: சத்யராஜ் உறுதி

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி கதநாயகனாக நடித்துள்ள மண்டாடி திரைப்படம் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் வெற்றிமாறன், ஆர்.ஜே.பாலாஜி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

சீனாவில் வசூல்

இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், "மண்டாடி படத்தை சீனாவில் வெளியிட்டால் நிச்சயமாக ₹1,000 கோடி வரை வசூல் செய்யும்.

ஏனெனில் அங்கு விளையாட்டு தொடர்பான திரைப்படங்களுக்கு மாபெரும் வரவேற்பு உள்ளது.

அமீர்கானின் தங்கல் மற்றும் நான் நடித்த கனா திரைப்படங்கள் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றன.

கடலுக்குள் ஆபத்தான முறையில் உயிரைப் பணயம் வைத்து சூரி நடித்துள்ள விதம் அசாத்தியமானது.

சூரிக்கு சரியான ரசிகர்கள் அமைந்திருக்கிறார்கள்." எனப் புகழாரம் சூட்டினார்.

திரைப் பயணம்

விழாவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, 1999ல் சங்கமம் படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகத் தொடங்கி, தற்போது ஹீரோவாக மாற சூரி 25 ஆண்டுகள் போராடியுள்ளதை சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, "எனக்குக் கிடைக்கும் அத்தனை பாராட்டும் இயக்குநர் வெற்றிமாறனையே சேரும்.

அவர் போட்ட விதையாகவே நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.

எந்தக் கதாபாத்திரத்தையும் என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இயக்குநர்களிடம் உருவாக்கியவர் வெற்றிமாறன் தான்.

அவருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "ஒரு நடிகருக்கு உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி இயக்குநர் சொல்வதை செய்யும் திறன் மிக முக்கியம், அதை சூரி கச்சிதமாக செய்கிறார்.

அதேவேளையில் ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் போது, முறையான பயிற்சி மற்றும் திட்டமிடலுடன் விபத்துக்கள் ஏதும் நடக்காத வண்ணம் நடிக்க வேண்டும் என சூரியைக் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.