'டாஸ்மாக்' பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை: தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்தின், மதுக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, வலியுறுத்தி வருகின்றனர்.
அவற்றை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
அவர்களுடன், இம்மாதம் 24ம் தேதி, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேச்சு நடத்தினார்.
அதில் திருப்தி அடையாததால், 'திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும்' என, தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், நேற்று மாலை அவர் களுடன், அமைச்சர் விக்னேஷ் மீண்டும் பேச்சு நடத்தினார்.
அதில், 'வரும், 31ம் தேதி மது விலக்கு ஆயத்தீர்வை துறை, மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, சீருடை உள்ளிட்ட கோரிக்கைகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்படும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, போராட்டத்தை ஒத்தி வைப்பதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.