12 துாய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி
சென்னை: துாய்மை பணியாளர்கள் 12 பேரை மீண்டும் பணியில் சேர்க்க, சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, ரிப்பன் மாளிகை முன், விசில் அடித்து நுாதன போராட்டம் நடத்தினர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட, 13 பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பது, அவர்களின் முக்கிய கோரிக்கை. இது தொடர்பாக, உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி, சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரனிடம், கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து, கோகுல்ராஜ், சதீஷ்குமார், மணிமேகலை உட்பட, 12 பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க கமிஷனர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். விடுபட்ட மற்றொரு பணியாளரை, பணியில் சேர்க்க பரிசீலனை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பட விளக்கம்: விசில் அடித்து நுாதன போராட்டம் பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை முன் கூடி நேற்று, 'விசில்' அடித்து நுாதன போராட்டம் நடத்தினர்.