தமிழ்வழி பள்ளிப்படிப்பை முடித்து மணிப்பூரில் மாவட்ட ஆட்சியராகி சாதனை
ரெனிடா: தமிழ் வழி பள்ளிப் படிப்பை முடித்து இன்று ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த 23 வயதான ஏஞ்ஜலின் ரெனிடா மணிப்பூர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
அம்மாநிலத்தில் இளம் வயதில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
தமிழ் வழியில் படித்து தனது பள்ளிப்படிப்பை முடித்த ஏஞ்ஜலின் பின்னர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, நீர்ப்பாசன பொறியியல் படித்து தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிக்கான தேர்வை எழுதிய அவர், அதில் தனது முதல் முயற்சியிலேயே 338வது இடத்தை பிடித்து தேர்ச்சிப் பெற்றார். அதன் பின்னர் மணிப்பூரில் மாவட்ட ஆட்சியராக உயர்ந்துள்ளார்.
முன்னதாக மணிப்பூர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டதையடுத்து தற்போது மணிப்பூர் மாநில காட்சிங் மாவட்ட ஆட்சியராக சேர்ந்துள்ளார் ஏஞ்ஜெலின்.
அவரது சொந்த மாவட்டம் தஞ்சாவூர் ஆகும். தமிழ் வழியில் படித்து வாழ்க்கையில் முன்னேறி வரும் அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.