டியோ சீ ஹியனுக்கு கெளரவப் பட்டம்
பிரதமர் அலுவலக மூத்த ஆலோசகர் டியோ சி ஹியனுக்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கெளரவ முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது.
பல ஆண்டு காலமாகப் பல்வேறு பொறுப்புகளில் சிங்கப்பூருக்குப் பங்காற்றியதை அங்கீகரித்து அவருக்கு புதன்கிழமை பட்டமளிக்கப்பட்டது.
திரு டியோ, 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். உள்துறை, தற்காப்பு, கல்வி அமைச்சர் போன்ற பொறுப்புகளை அவர் நிர்வகித்திருக்கிறார்.
திரு டியோ துணைப் பிரதமர், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர், மூத்த அமைச்சர் பொறுப்புகளையும் வகித்தவராவார். கடந்த 2025ஆம் ஆண்டு அவர் அரசியலிலிருந்து விலகிக்கொண்டார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடனான தொடர்பு
திரு டியோவுக்கும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் உள்ள தொடர்பு அப்பல்கலைக்கழகத்தின் ஆரம்பக் காலத்தில் தொடங்கிய ஒன்றாகும்.
அவர் 1988லிருந்து 1991ஆம் ஆண்டு வரை நன்யாங் தொழில்நுட்பக் கழகத்தின் (Nanyang Technological Institute) மன்ற உறுப்பினராக இருந்தார். அக்காலகட்டத்தில்தான் அந்தக் கழகம் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.
அதோடு, 1991ஆம் ஆண்டு ஜூலை மாதம் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தேசியக் கல்விக்கழகத்துடன் இணைந்தது.
தற்போது தெமாசெக் அமைப்பின் தலைவராக இருக்கும் திரு டியோ, அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து கெளரவ முனைவர் பட்டத்தைப் பெற்றார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சடங்கு ஒன்றில் பட்டமளிப்பு இடம்பெற்றது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அதிபர் தர்மன், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராவார்.
பெருமை தெரிவித்த திரு டியோ
கடந்த ஆண்டுகளில் நன்யாங் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரைத் தொடர்புகொள்ள மற்ற பல வாய்ப்புகள் தமக்குக் கிட்டியதாக திரு டியோ தமது உரையில் தெரிவித்தார். அவர் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தபோது கிடைத்த வாய்ப்புகளும் அவற்றில் அடங்கும்.
“அடுத்தடுத்த தலைமுறையினரின் தொலைநோக்குப் பார்வையாலும் அவர்கள் பொறுமையாக மேற்கொண்ட முயற்சிகளாலும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்குப் படிப்படியாக அங்கீகாரம் கிடைத்திருப்பதோடு கற்றலிலும் ஆய்விலும் அனைத்துலக அளவில் அது மேலோங்கியிருக்கிறது,” என்றும் திரு டியோ புகழாரம் சூட்டினார்.
நன்றியுடனும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் பெரும் வளர்ச்சியடைந்ததை எண்ணிப் பெருமையுடனும் கெளரவப் பட்டத்தைத் தாம் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.