வக்பு வாரியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு களப்பணி வழங்கியது ஏன்?.. பேரவையில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கேள்வி
வக்பு வாரியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு களப்பணி வழங்கியது ஏன்?.. பேரவையில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கேள்வி
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: தமிழ்நாடு வக்பு வாரியத்திலே கண்காணிப்பாளர்களாக சாகிரா பானு, ஜாகிர், அப்துல்லா என்ற மூன்று மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகிறார்கள். ஜாகிர் என்பவர் ஏற்கனவே ஒரு விபத்தில் சிக்கி இருக்கிறார். அதேபோல சாகிரா பானுவுக்கு ஒரு கால் செயலிழந்து செயற்கை காலில் பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு அலுவலகப் பணிகள் தான் கொடுக்க வேண்டும். ஆனால் களப்பணி வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு அலுவலகப் பணியை அளிப்பதற்கு அமைச்சர் முன்வருவாரா? இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேசுகையில், ‘‘தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி அலுவலர்கள் சென்னை மற்றும் பூந்தமல்லி சரக அலுவலகங்களில் பணிகள் சீராக நடைபெறுவதற்காக நிர்வாக காரணங்களின் அடிப்படையில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளி அலுவலர்கள் எவரும் வெகு தொலைவில் களப்பணி ஆற்றும் வகையில் இடமாற்றம் செய்யப்படவில்லை’’ என்றார்.