📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 27, 2026 04:04 PM

வடக்கு, வடகிழக்குப் பகுதிக்கு விரிவுபடுத்தப்படும் ‘ரெட்மார்ட் நாவ்’

வடக்கு, வடகிழக்குப் பகுதிக்கு விரிவுபடுத்தப்படும் ‘ரெட்மார்ட் நாவ்’

சிங்கப்பூரின் வடக்கு, வடகிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் வாழைப்பழம், பால் போன்ற பலசரக்குப் பொருள்களை இனி 30 நிமிடங்களுக்குள் தங்கள் வீட்டு வாசலிலேயே காலை 7 மணியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

விரைவு பலசரக்கு விநியோகச் சேவை வழங்கும் ரெட்மார்ட் நாவ் நிறுவனம், பொங்கோல், செங்காங், ஈசூன், உட்லன்ட்ஸ் ஆகிய பகுதிகளுக்கு அதன் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சேவை, முதற்கட்டமாக சிங்கப்பூர் தெற்கு - மத்திய வட்டாரத்திலும் மேற்கு வட்டாரத்திலும் சேவை வழங்கியது.

ரெட்மார்ட் நாவ் சேவையின் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணிவரை ரெட்மார்ட் நாவ் பலசரக்குப் பொருள்களை விநியோகம் செய்தது. இனி காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணிவரை பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.

ரெட்மார்ட் நாவ் தளத்தில் பொருள்களை வாங்குவதற்கு $3.99 சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன், $30க்குக் குறைவான மதிப்பில் பொருள்கள் வாங்கினால் $5.99 விநியோகக் கட்டணம் செலுத்தவேண்டும்.

விநியோகச் சேவைக்கான தேவையை அதிகரிக்க ரெட்மார்ட் நாவ், விநியோக வேன்கள், மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் கூடுதல் தேவைகளைப் பூர்த்திசெய்ய இம்மாதம் 20ஆம் தேதி பலசரக்குப் பொருள்களைப் பெற்று, பொட்டலமிட்டு, விநியோகம் செய்வதற்கான புதிய நிலையத்தை ரெட்மார்ட் நாவ் திறந்துள்ளது.

கூடுதல் வட்டாரங்களுக்குச் சேவையை விரிவுபடுத்தவும் இன்னும் அதிகமான விநியோக நிலையங்களைத் திறக்கவும் ரெட்மார்ட் திட்டமிடுகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ரெட்மார்ட், லஸாடா சிங்கப்பூர் ஆகியவற்றின் தலைமைத் தளவாட அதிகாரி வெங்கட் எஸ், சேவை தொடங்கி ஓராண்டுக்கூட இன்னும் நிறைவேறாத நிலையில் ஆண்டிறுதிக்குள் தீவெங்கும் அதைக் கொண்டுசெல்ல திட்டமுள்ளதாகத் தெரிவித்தார்.

“வாடிக்கையாளர்களிடமிருந்து வலுவான ஆதரவைப் பெறுகிறோம். கடையைக் காலை 7 மணிக்குத் திறக்கும்போது 7.01 மணிக்கெல்லாம் பலசரக்குகளுக்கான பதிவுகள் வந்துவிடுகின்றன,” என்றார் அவர்.

2016ஆம் ஆண்டு லஸாடா நிறுவனம் ரெட்மார்ட் நிறுவனத்தை கிட்டத்தட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.