நேப்பாள
நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்க நேப்பாள, சீன அதிகாரிகளுடன் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தொடர்பில் உள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அவர் அவ்வாறு கூறினார்.
வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் பேரழிவுக்கும் திரு வோங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீட்பு, துயர் தணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடனும் நெருக்கடி நேர ஊழியர்களுடனும், நேபாள, சீன மக்களுடனும் சிங்கப்பூர் துணைநிற்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். காணாமற்போனவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேப்பாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் கிட்டத்தட்ட 160 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும், சிங்கப்பூரர்கள் இருவர் உட்பட ஏறக்குறைய 1,500 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.