சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் நேபாள
நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு, திடீர் வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்காக, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,000 நிதியுதவியை அறிவித்துள்ளது.
இந்தத் தொகை, செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கத்தின் அனைத்துலகப் பங்காளிகள் மூலமாகப் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுசேர்க்கப்படும் என்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சங்கம் தெரிவித்தது. குடிநீர், கம்பளிகள், பாய்கள், முதலுதவிப் பெட்டிகள், சடலங்களை அப்புறப்படுத்துவதற்கான பைகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) பொதுமக்களிடம் நிதி திரட்டும் இயக்கத்தையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கவுள்ளது.
இதற்கிடையே, பேரிடரால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றுசேர்க்கும் நோக்கில் ‘குடும்பத் தொடர்புகளை மீட்கும்’ சேவையையும் அது முடுக்கிவிட்டுள்ளது. நேப்பாளம் அல்லது திபெத்தில் தங்களின் உறவினர்களுடனான தொடர்பை இழந்தவர்கள் rfl@redcross.sg என்ற மின்னஞ்சல் வாயிலாகச் சங்கத்தை அணுகலாம்.
வியாழக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரர்கள் ஒன்பது பேர் உட்பட வெளிநாட்டினர் 517 பேருடன் தொடர்புகொள்ள முடியவில்லையென நேப்பாளச் சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன,” என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத் தலைமைச் செயலாளரும் தலைமை நிர்வாகியுமான பெஞ்சமின் வில்லியம் குறிப்பிட்டார்.