அர்பன் கெத்து: சிங்கப்பூரில் தமிழ் ஹிப்
சிங்கப்பூர் ரசிகர்கள் உலகின் மிகச்சிறந்த இசை ரசிகர்களுள் அடங்குவர் என்றும் திரையிசையைவிட தனியாகச் செயல்படும் தமிழ் ஹிப்ஹாப் பாணிப் பாடல்களுக்கு சிங்கப்பூர் மக்கள் அளிக்கும் பேராதரவு ஈடு இணையற்றது என்றும் புகழ்பெற்ற ஹிப்-ஹாப் இசைக்கலைஞர் யோகி பி தெரிவித்துள்ளார்
‘அர்பன் கெத்து’ (Urban Gethu) எனும் ஹிப்ஹாப் இசை விழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் வந்துள்ள அவர், அந்நிகழ்ச்சி குறித்தும் தமது இசைப்பயணம் குறித்தும் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.
‘272 என்டர்டெயின்மென்ட்’ அமைப்பின் தயாரிப்பில், ஆகஸ்ட் 29ஆம் தேதி சனிக்கிழமை ஃபார் ஈஸ்ட் ஸ்குவேரில் உள்ள ‘கிளாஸ் டோம்’ (Glass Dome) அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தமிழ் ஹிப்ஹாப் முன்னோடிகளான யோகி பி, எம்சி ஜெஸ் இருவரும் தலைமுறை கடந்த கலைஞர்களை ஒன்றிணைத்து இந்நிகழ்ச்சியை வழிநடத்தவுள்ளனர்.
இது, மூன்று தலைமுறைக் கலைஞர்களை ஒன்றிணைத்து ஹிப்ஹாப் இசையின் வளர்ச்சி, பன்முகத்தன்மை, உலகளாவிய வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் அமையும்.
இந்த நிகழ்ச்சிக்கென பிரத்தியேகமாகச் சிங்கப்பூரில் நடந்த குரல் தேடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 வயது சிறுவன் பிரைஹான், விக்னா - லிசா இணையர் என உள்ளூர்க் கலைஞர்கள் சிலரும் இதில் அறிமுகமாகின்றனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த டகால்டி (Dacalty), மும்பை ராப் கலைஞர் ஜேகுவீன் (JQueen), சிங்கப்பூரைச் சேர்ந்த டிஜே லோகா, தர்புகா கலைஞர் ஷாம்ரோஸ் கான் ஆகியோருடன் கே.பி. சந்துவும் இணைந்து இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார்.
நிகழ்ச்சிக்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய யோகி பி, எம்சி ஜெஸ், ‘வல்லவன்’ ஆல்பம் நினைவுகளையும், அவர்கள் முதல்முறையாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் அரங்கேறியபோது நடந்த மறக்க முடியாத தருணங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஆழமான தமிழ் வரிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய எம்சி ஜெஸ், ‘அர்பன் கெத்து’ இசைக் கச்சேரியானது தமிழ் ஹிப்ஹாப் இசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார்.