📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 05, 2026 03:01 AM

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் கைது!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் கைது!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் கைது! - பின்னணி என்ன?

பணம் கேட்டு மிரட்டிய குற்றச்சாட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரியும் ஊர்காவல்படையைச் சேர்ந்த சீனிவாசனும் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அகில்குமார். தொழிலதிபரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன்னை பொய்யாக தொடர்புபடுத்தியதோடு கைது செய்வதாக மிரட்டி இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, இதுவரை 35 லட்சம் ரூபாய் வரை வாங்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன்பேரில் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முகமது புகாரியிடம் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழிலதிபர் அகில்குமார் கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மையென தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தொழிலதிபர் அகில்குமார், இன்னொரு குற்றச்சாட்டையும் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மீது சுமத்தினார். கடந்த 2.8.2026-ம் தேதி என்னுடைய வீட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர் புகாரியும் சில போலீஸாரும் போதை பொருள் தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர். பின்னர் போதை பொருள் வழக்கிலிருந்து தப்பிக்க உடனடியாக 5 லட்சம் ரூபாயை ஊர்காவல்படையைச் சேர்ந்த சீனிவாசனிடம் கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் முகமது புகாரி கூறினார். அதன்பேரில் நானும் 5 லட்சம் ரூபாயை சீனிவாசனிடம் கொடுத்தேன் என்று தெரிவித்தார். அதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, ஊர்காவல்படையைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் முகமது புகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் முகமது புகாரியையும் ஊர்காவல் படையைச் சேர்ந்த சீனிவாசனையும் யானைக்கவுனி போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்ஸ்பெக்டர் முகமது புகாரி கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

`` கடந்த 2024-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தனிப்படையில் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி இருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குன்றத்தூரைச் சேர்ந்த ரௌடி திருவேங்கடத்தை கஸ்டடியில் எடுத்து தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக திருவேங்கடத்தை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி அழைத்துச் சென்றார். அப்போது நடந்த மோதலில் திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இன்ஸ்பெக்டர் முகமது புகாரி பரங்கிமலை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில்தான் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தொழிலதிபர் அகில்குமாரிடமும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசாரித்திருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் பயன்படுத்திய சிம்கார்டு, தொழிலதிபர் அகில்குமாரின் பெயரில் இருந்திருக்கிறது. அதனால், தொழிலதிபர் அகில்குமாரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்திருக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அகில்குமாரை சேர்த்துவிடுவோம் என மிரட்டி 35 லட்சம் ரூபாய் வரை தனிப்படை போலீஸார் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து போதை பொருள் வழக்கிலும் அகில்குமாரை சேர்த்துவிடுவோம் என இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மிரட்டியதாகவும் வழக்கில் பெயரைச் சேர்க்காமலிருக்க 5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மீது அகில்குமார் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த இடம் யானைக்கவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, அவருக்கு உடந்தையாக இருந்த சீனிவாசனையும் கைது செய்திருக்கிறோம்'' என்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உள்ள நிலையில் அந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் முகமது புகாரி சர்ச்சையில் சிக்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.