📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 29, 2026 07:03 PM

“சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்”

“சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்”

சென்னை: வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மார்ச் மாதம் ரூ.144 ரூபாயும், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று மே 1ஆம் தேதி சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,239 ரூபாயாக விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க - ஈரான் போரால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி ஒன்றிய பாஜக அரசு வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை ஒரேடியாக சுமார் 1000 ரூபாய் அதிகரித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

கடந்த இரண்டு மாதங்களாக சமையல் எரிவாயு வினியோகம் தடைப்பட்டதால் உணவகங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்ததுடன், உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது.

இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். ஒன்றிய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.