📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 20, 2026 11:00 AM

சவுதியில் தமிழக மீனவர் படுகொலை; சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம்

சவுதியில் தமிழக மீனவர் படுகொலை; சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின. காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை.

இதுபற்றி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறும்போது, கேள்வி நேரத்திற்கான பதில் தயாரான பின்னரே அனுமதி அளிக்க முடியும். நோட்டீஸ் கொடுத்த உடனே பேச அனுமதிக்க முடியாது. பதில் அளிக்க அமைச்சர் தயாராக இருக்கின்றனரா? என்பது பற்றி தெரிந்த பின்னரே அனுமதி அளிக்க முடியும் என கூறினார். அவசர, அவசியம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்படுகிறது என்றார்.

இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசி வருகின்றனர்.

அவையில் நேற்றைய நிகழ்வின்போது, சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. கவன ஈர்ப்பு கோரியிருந்தது. எனினும், இதுபற்றி பேச அனுமதிக்கவில்லை என கூறி, அவையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வெளியே நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது, சவுதி அரேபியாவில், மயிலாடுதுறையை சேர்ந்த தமிழக மீனவர் ஒருவர் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த விவகாரம் குறித்து பேச அவையில் அனுமதிக்கவில்லை. உலகின் எந்த பகுதியில் தமிழன் பாதிக்கப்பட்டாலும் அவருக்காக குரல் கொடுப்பதே நமது வழக்கம்.

தமிழருக்கு பாதிப்பு என்றால் உடனே கவன ஈர்ப்பு எடுக்க வேண்டும். கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாள்களாகியும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுவே அ.தி.மு.க., தி.மு.க. அரசாக இருந்தால் கவன ஈர்ப்பு எடுத்திருப்போம்.

மானிய கோரிக்கைகள் விவாதம்

ஒரு வாரம் ஆகியும் சவுதி அரேபியாவில் இருந்து சீர்காழி மீனவர் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை இல்லை. த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் எதற்காக கத்துகிறார்கள்? என்றே தெரியவில்லை. தமிழர்களை காப்போம் என பேச மட்டுமே செய்கின்றனர். ஆனால், ரீல்ஸ் வெளியிட்டு ரீல் விடுவதே நடக்கிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார். இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் இதுதொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் இதுபற்றி எதிர்க்கட்சியினர் ஒவ்வொருவராக பேசினர்.