இந்திய அணி ஒழுங்கா பயிற்சி எடுக்கக் கூடாது என்றே இலங்கை செய்த செயல்.. அதிருப்தியில் அணி நிர்வாகம்
இந்திய அணி ஒழுங்கா பயிற்சி எடுக்கக் கூடாது என்றே இலங்கை செய்த செயல்.. அதிருப்தியில் அணி நிர்வாகம்
கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக 3 நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது. ஆடுகளத்தில் அதிகளவில் புற்கள் விடப்பட்டிருப்பது இந்திய அணி நிர்வாகத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான கல்லே மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதனால், அதற்குத் தயாராகும் வகையில் கொழும்பில் உள்ள என்சிசி மைதானத்தில் நடைபெறும் இந்த 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தை இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்த்திருந்தது. ஆனால், ஆடுகளத்தை ஆய்வு செய்த போது அங்கு அதிக அளவில் பச்சை புற்கள் விடப்பட்டிருப்பதைப் பார்த்து இந்திய அணியினர் தங்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து என்சிசி மைதானத்தின் மூத்த அதிகாரி ஏ. பிரான்கே கூறுகையில், "ஆடுகளத்தில் புற்கள் இருப்பது உண்மைதான். ஆனால், இது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நேரடி வழிகாட்டுதலின் பேரிலேயே செய்யப்பட்டுள்ளது. 3 நாள் டெஸ்ட் போட்டிக்கு முற்றிலும் காய்ந்த ஆடுகளத்தை வழங்க முடியாது. ஆட்டத்தின் 2வது அல்லது 3வது நாளில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக மாறும்" என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதே நல்லது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். என்சிசி ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கு ரன் குவிக்கவும், ஆடுகளத்தில் அதிக நேரம் செலவிடவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பொதுவாக கல்லே மைதானத்தில் முதல் நாளில் இருந்தே பந்து நன்கு சுழலும் என்பதால், அதற்குத் தயாராக இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள விரும்பினர். ஆனால், இந்த புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் அவர்கள் வேகப்பந்து வீச்சையும், ஸ்விங் பந்துகளையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாக ஒவ்வொரு அணியும் தங்கள் நாட்டுக்கு டெஸ்ட் தொடரில் ஆட வரும் அணிக்கு பயிற்சி ஆட்டத்தின் போது இது போன்ற சிக்கல்களை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். எனினும், 9 ஆண்டுகள் கழித்து இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆட உள்ள இந்திய அணிக்கு வேண்டுமென்றே வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் அளிக்கப்பட்டுள்ளது.