காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரம் திடீர் மறைப்பு: முதல்வர் விஜய் கேள்வியால் அதிரடி
சென்னை:புழல் காவல் நிலைய பலகையில் இடம்பெற்றிருந்த தனியார் விளம்பரம், முதல்வர் விஜயின் கேள்வியால் மறைக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் விஜய், நேற்று முன்தினம் புழல் மத்திய சிறை, புழல் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, காவல் நிலைய பலகையில், தனியார் விளம்பரம் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
காவல்நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரங்கள் இருந்தால், அரசு சொல்வதை செய்வீர்களா அல்லது விளம்பரதாரர்கள் சாதகமாக செயல்படுவீர்களா என, விஜய் கேட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, விஜய் சென்ற பின், காவல் நிலைய பெயர் பலகையில், விளம்பர நிறுவனத்தின் பெயரை, வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டி போலீசார் மறைத்துள்ளனர்.
விளம்பர நிறுவன பெயர் இன்றி, மாற்று பலகை வைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுதும், தனியார் நிறுவனம் நன்கொடையால் வைக்கப்பட்ட காவல் நிலைய பலகைகளில், விளம்பர நிறுவன பெயர்களை நீக்கவும் போலீசாருக்கு, உயர் அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல், போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல், கூட்டத்தை சமாளித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும், 'பேரிகார்டு' எனப்படும் இரும்பு தடுப்புகளும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக வாங்கப்படுகிறது. அவற்றிலும் விரைவில் கட்டுப்பாடுகள் வரும் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.