Mandaadi Blue Sattai Maran Review
சென்னை: மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்திருக்கும் மண்டாடி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. இனி வரும் காலங்களில் சூரி முழு மாஸ் ஹீரோவாக மாறுவதற்கான அத்தனை விஷயங்களும் இதில் தென்படுகின்றன. வசூலிலும் முதல் நாளான நேற்று படம் சூப்பர் ரெஸ்பான்ஸையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
கதையின் நாயகனாக விடுதலை படத்தின் மூலம் மாறிய சூரி; இப்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் மண்டாடி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்தது. அதே ஹைப்போடு நேற்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். சூரிக்கு இந்தப் படம் உறுதியாக மெகா ஹிட்தான். இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.
மண்டாடி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் தன்னுடைய விமர்சனத்தில், "ஒரு மீனவ கிராமத்தில் பாய்மர படகு போட்டியை தொடர்ச்சியாக நடத்திவருகிறார்கள். எல்லோரும் அதை போட்டியாக பார்த்தால்; ஒருவர் மட்டும் வியாபாரமாக பார்க்கிறார். அவர்தான் வில்லன். அந்த ஊரை விட்டு விலகியிருக்கும் ஹீரோ, 'இந்த விளையாட்டு ஊருக்கான சொத்து. ஊரில் ஒரு டீமை உருவாக்கி வென்று கோப்பையை வென்று காட்டுகிறேன் என சொல்லி ஹீரோ இறங்குகிறார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
ரொம்ப அந்நியம்: இந்தக் களம் புதிதாக இருந்தது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு களத்தை இதுவரை பார்த்தது கிடையாது. ஆனால் இதை வழக்கமான ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட்டில்தான் எடுத்து வைத்திருக்கிறார்கள். பெரிதாக எந்த ட்விஸ்ட்டும், டர்னும் இல்லை. வழக்கமான படமாக அமைந்துவிட்டது. படத்தில் பாய்மர படகு போட்டியில் நிறைய டெக்னிக்குகளை வைத்திருக்கிறார்கள். பந்தயம் நடக்கும்போது நமக்கு அதை சொல்கிறார்கள். அதையெல்லாம் ஏன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதெல்லாம் ரொம்ப அந்நியமாக இருந்தது.
எப்படி என்று தெரியவில்லை?: இந்தப் படமே பாய்மர கப்பலை வைத்துதான் கதை. பாய்மர ரேஸ் விடுகிறார்கள். ரேஸ் எல்லாம் கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் தள்ளித்தான் நடக்கிறது. கடலுக்குள் நடக்கும் ரேஸை ரன்னிங் கமெண்ட்ரியில் சொல்கிறார்கள். எப்படி இங்கிருந்து பார்த்து சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. மஹிமா மட்டும் கலங்கரை விளக்கத்தில் ஏறி நின்று பைனாகுலரில் பார்க்கிறார்கள். அதில் பார்த்தால்தான் உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால் இவர்களோ கரையில் அமர்ந்து கமெண்ட்ரி கொடுக்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை?
ஏன் அப்படி மேக்கப்?: படம் முழுவதும் ஒரே உறுத்தலாக இருந்தது. ஒவ்வொரு கேரக்டருக்கும் போட்டிருக்கும் மேக்கப் கேவலமாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் டல்லான மேக்கப்பையே போட்டிருக்கிறார்கள். சத்யராஜுக்கு ஏன் அப்படி மேக்கப் போட்டார்கள் என்று தெரியவில்லை. படத்தில் கேமரா ஒர்க் எல்லாம் அவ்வளவு பிரமாதமாக இருந்தது. கடினமான உழைப்பை எல்லோரும் போட்டிருக்கிறார்கள்.கடைசி பத்து நிமிடங்கள் நன்றாக இருந்தது. ஆனால் அந்த பத்து நிமிடங்களுக்காக இரண்டரை மணி நேரம் பாடி தாங்குமா என்பதை பார்க்க வேண்டும்" என்றார்.