மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் நேரில் ஆய்வு
மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் ஜூலை மாத மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்தது. இதையடுத்து. மின் நுகர்வு கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதம் மின் நுகர்வில் அதிக மாற்றம் காணப்பட்ட 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வை ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இணைப்புகள் ஆய்வு
இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் 25 இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 இணைப்புகளையும், கோட்டப் பொறியாளர் 75 இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50, உதவி கோட்டப் பொறியாளர் 100, வருவாய் புலனாய்வு பிரிவு கணக்கு அலுவலர் 150, மூத்த மதிப்பீட்டு அலுவலர் 150, வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர் 100. மதிப்பீட்டு அலுவலர் 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் தெரிவித்துள்ளார்.