📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 07, 2026 04:32 PM

மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகும் மற்றொரு டாப் வீரர்.. 2027 ஐபிஎல் தொடருக்கு முன் மாற்றம் உறுதி

மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகும் மற்றொரு டாப் வீரர்.. 2027 ஐபிஎல் தொடருக்கு முன் மாற்றம் உறுதி

மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகும் மற்றொரு டாப் வீரர்.. 2027 ஐபிஎல் தொடருக்கு முன் மாற்றம் உறுதி

மும்பை: 2027 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து அதன் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ், நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்கி வருகிறார்.

அவரது தலைமையில் இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையை வென்றது. ஆனால், அதன் பின்னர் மோசமான ஃபார்ம் காரணமாக அவர் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதே போல, ஐபிஎல் தொடரிலும் அவரது சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்தது. கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் 717 ரன்கள் குவித்த சூர்யகுமார், 2026 சீசனில் 13 போட்டிகளில் விளையாடி வெறும் 2 அரைசதங்களுடன் 20.76 சராசரியில் 270 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த 2026 சீசன் மிகவும் மோசமாக அமைந்தது. அந்த அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டும் வென்று புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தையே பிடித்தது. இந்த படுதோல்வியைத் தொடர்ந்து, அணியில் உள்ள முக்கிய வீரர்களை விடுவிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் அணியை விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், சூர்யகுமார் யாதவ் எந்த அணிக்குச் செல்வார் என்ற குழப்பம் நீடிக்கிறது. அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அங்கு செல்ல சூர்யகுமாருக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. மும்பை அணியிலிருந்து அவர் வெளியேறுவது உறுதி என்றாலும், அவர் எந்த புதிய அணியில் இணையப் போகிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.